

முதுமலையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஏராளமான இடங்களில் மூங்கில் அரிசி பூத்துள்ளது. மருத்துவ குணம் கொண்ட மூங்கில் அரிசி கிலோவுக்கு ரூ.800 வரை விற்பதால் உள்ளூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அரிசியைச் சேகரிக்கும் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதிகளில் மூங்கில் செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இங்குள்ள மூங்கில் செடிகள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு முக்கிய உணவாக இருந்து வருகின்றன. அதேபோல உள்ளூர் பழங்குடியின மக்கள் மூங்கிலை உணவாகவும், வீடுகளைக் கட்டுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிப் பல பயன்களைத் தரும் மூங்கில் செடிகளின் ஆயுட்காலம் 40 ஆண்டுகள் மட்டுமே. 40 ஆண்டுகள் முடிந்த மூங்கில் செடிகளில் பூ பூக்கத் தொடங்கும். பூ பூத்த சில வாரங்களில் அதில் இருந்து விதைகள் கொட்டத் தொடங்கும். இதுதான் மூங்கில் அரிசி என்று கூறப்படுகிறது. பின்னர் குறிப்பிட்ட சில நாட்களில் மூங்கில் செடிகள் காய்ந்து, அழிந்து போகும்.
இந்நிலையில் கூடலூரின் வனம் மற்றும் ஊருக்குள் உள்ள சுமார் 50% மூங்கில் செடிகளின் ஆயுட்காலம் முடிந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த மூங்கில் செடிகளில் பூ பூக்கத் தொடங்கியது. தற்போது அந்தச் செடிகளில் இருந்து மூங்கில் விதைகள் கொட்டத் தொடங்கியுள்ளன.
சேகரிக்கும் பழங்குடியினர்
வனத்தை ஒட்டிய பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் கொட்டிக் கிடக்கும் மூங்கில் அரிசியைச் சேகரிக்கும் பணியில் உள்ளூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஈடுபட்டுள்ளனர். மூங்கில் அரிசி பழங்குடியின மக்களின் முக்கிய உணவாக உள்ளது. பாரம்பரியமாக பழங்குடியின மக்கள் தங்களது உணவு வழக்கத்தில் மூங்கில் அரிசியைப் பயன்படுத்தி வருகின்றனர். தங்களது உணவுத் தேவைக்குப் போக மீதமுள்ள அரிசியை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கிலோவுக்கு ரூ.800 வரை கிடைப்பதால் அவர்களுக்கு வருவாய் தரும் தொழிலாகவும் இது அமைந்துள்ளது.
மூங்கில் அரிசியின் மருத்துவ குணம் தெரிந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நேரடியாக வந்து பழங்குடியின மக்களிடம் இருந்து வாங்கிச் செல்கின்றனர். வனம் மற்றும் சாலை ஓரங்களில் இருந்து சேகரிக்கப்படும் இந்த மூங்கில் அரிசியை எடுத்துச் சென்று தண்ணீரில் கழுவிக் காய வைத்து, உரலில் இடித்து அதிலிருந்து அரிசியை எடுக்கின்றனர். அவ்வாறு எடுக்கப்படும் அரிசி சாதாரண அரிசியைப் போலவே சமைத்துப் பழங்குடியின மக்களால் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மூங்கில் அரிசியை அரைத்துப் பொடியாக்கி அதனைக் குழந்தைகளுக்குக் கூழ் காய்ச்சிக் கொடுக்கின்றனர். அதேபோல மூங்கில் அரிசி மாவு மூலம் தோசை, இட்லி, பலகாரம் உள்ளிட்ட உணவு வகைகளையும் செய்து உட்கொள்கின்றனர். மூங்கில் அரிசியை உணவாக எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பலம், நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதாகப் பழங்குடியின மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ''கடந்த காலங்களில் வனத்துறை கட்டுப்பாடுகள் இல்லாதபோது வனப்பகுதிக்குள்ளேயே சென்று மூங்கில் அரிசியைச் சேகரித்தோம். எங்களது பெற்றோர் காலத்தில் வனப்பகுதிக்குள் சென்று மூங்கில் அரிசியை எடுத்து வந்த ஞாபகம் உள்ளது. ஆனால், தற்போது வனத்துறை கட்டுப்பாடுகள் காரணமாக வனப்பகுதிக்குள் சென்று எடுக்க முடிவதில்லை. எனவே, சாலை ஓரங்கள் மற்றும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் இருந்து மூங்கில் அரிசியைச் சேகரிக்கிறோம்'' என்று தெரிவித்தனர்.
நீலகிரி இயற்கை மற்றும் சமூக அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் கூறும்போது, ''மூங்கில் அரிசியில் பல மருத்துவ குணங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. மூங்கில் அரிசியில் அதிகப்படியான கலோரிகள் உள்ளன. மேலும் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம் உள்ளிட்ட பல சத்துகள் இதில் உள்ளன. மூங்கில் அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. மூட்டு வலி, முட்டியில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், முதுகு வலி, இடுப்பு வலி உள்ளிட்டவற்றுக்கும் இது மருந்தாகச் செயல்படுகிறது.
உடல் எடையைக் குறைக்கவும் மூங்கில் அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளலாம். இப்படிப் பல மருத்துவ குணங்களைக் கொண்ட மூங்கில் அரிசி சீசன் இன்னும் ஒருசில வாரங்களில் முடிந்து விடும். அதைச் சேகரிக்கும் பணியில் பழங்குடியின மக்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.