Last Updated : 12 Apr, 2021 03:01 PM

 

Published : 12 Apr 2021 03:01 PM
Last Updated : 12 Apr 2021 03:01 PM

மாலத்தீவுக்குக் கடத்த முயன்ற ரூ.30 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: தூத்துக்குடி அருகே 2 பேர் கைது

தூத்துக்குடி அருகே, மாலத்தீவுக்குக் கடத்துவதற்காக பண்ணைத் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான ஹசீஸ் என்ற போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை கூட்டாம்புளி பகுதியில் உள்ள ஒரு பண்ணைத் தோட்டத்தில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ், வேலாயுதம் ஆகியோர் தலைமையிலான போலீஸார் நேற்று இரவு அந்தப் பண்ணைத் தோட்டத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு மூன்று பாக்கெட்டுகளில் தலா 1 லிட்டர் வீதம் 3 லிட்டர் ஹசீஸ் எனப்படும் கஞ்சா எண்ணெய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். ஹசீஸ் போதைப் பொருளை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீஸார் அங்கு இருந்த திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள நாகல்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் பிரிட்டோ (37), தூத்துக்குடி மாவட்டம் பண்ணைவிளை இசக்கி ஐயர் தெருவைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் விக்டர் (49) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதில், பிரிட்டோ தற்போது செங்கல்பட்டு மாவட்டம் அச்சிரப்பாக்கம் கோபாலபுரம் 4-வது தெருவில் வசித்து வருகிறார். இவர் மாலத்தீவில் வேலை செய்து வருகிறார். அங்கிருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் இந்தியா வந்துள்ளார். இவர் தேனி மாவட்டத்தில் இருந்து ஹசீஸ் போதைப்பொருளை வாங்கி வந்து தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளி பண்ணை தோட்டத்தில் வைத்து 1 லிட்டர் பாக்கெட்டுகளில் அடைத்து மாலத்தீவுக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அந்தத் தோட்டத்தில் இருந்து பாக்கிங் செய்யப் பயன்படும் இயந்திரத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட இருவரையும் கியூ பிரிவு போலீஸார் போதைப்பொருள் தடுப்புப் புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஏற்கெனவே மாலத்தீவுக்கு போதைப்பொருள் கடத்தியுள்ளனரா என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் அண்மைக்காலமாக போதைப் பொருள் அடிக்கடி பிடிபட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து போலீஸார் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x