Published : 12 Apr 2021 12:13 PM
Last Updated : 12 Apr 2021 12:13 PM

கரோனா கட்டுப்பாடுகள்; கிருஷ்ணராயபுரத்தில் பேருந்துகள் நிற்காமல் சென்றதால் பயணிகள் சாலை மறியல்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் பேருந்துகள் நிற்காமல் சென்றதால் பயணிகள் சாலை மறியல் செய்தனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து கரூர் மற்றும் திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் வேலைகளுக்குச் செல்கின்றனர். கரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பேருந்துகளில் பயணிகள் அமர்ந்து மட்டுமே செல்ல வேண்டும், நின்றுகொண்டு செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தத்தில் இன்று (ஏப்.12-ம் தேதி) காலை நூற்றுக்கணக்கான பயணிகள் பேருந்து ஏற நின்று கொண்டிருந்தனர். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பி விட்டதாலும், பேருந்தில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லாததாலும் திருச்சியிலிருந்து கரூர் சென்ற அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் கரூரில் இருந்து திருச்சி சென்ற பேருந்துகள் நிற்காமல் சென்றன.

  சாலையில் அமர்ந்து மறியல் செய்த பொதுமக்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்
சாலையில் அமர்ந்து மறியல் செய்த பொதுமக்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் செய்தனர். இதுகுறித்துத் தகவலறிந்த மாயனூர் போலீஸார் மறியலை கைவிடக்கோரி பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பேருந்துகள் நிற்காததால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் ஊதிய இழப்பு ஏற்படும். எனவே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் அல்லது முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் மற்றும் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனர். அவ்வழியே வந்த பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. மறியலால் இப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x