Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM
வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், வேளாண் விரிவாக்க அலுவலர்ஆகிய பதவிகளை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு ஏப்ரல் 17, 18-ம் தேதிகளில் காலை, பிற்பகல் என இரு வேளையும், 19-ம் தேதி காலையிலும் 7 மாவட்டங்களில் நடக்க உள்ளன.
தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது ஒருமுறை பதிவேற்ற எண்ணை (OTR) பயன்படுத்தி, விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
இடம் அறிய புதிய வசதி
தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தை எளிதில் தெரிந்துகொள்ளும் நோக்கில், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் விரைவு தகவல் குறியீடு (QR Code) அச்சிடப்பட்டுள்ளது. இதை கியூஆர் செயலி மூலம் ஸ்கேன் செய்து தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தை கூகுள் மேப்ஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டுசெல்ல அனுமதி கிடையாது. செல்போன் உள்ளிட்டவற்றை தேர்வு மைய பாதுகாப்பு அறையில் ஒப்படைக்க வேண்டும்.
தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்புநிற பால் பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.காலையில் நடக்கும் தேர்வுக்கு9.15 மணிக்கு பிறகு தேர்வுக்கூடத்துக்குள் நுழையவோ, மதியம்1.15 மணிக்கு முன்பு வெளியேறவோ அனுமதி இல்லை. மதியம்நடைபெறும் தேர்வுக்கு 2.15மணிக்கு பிறகு தேர்வுக்கூடத்துக்குள் நுழையவோ, மாலை 5.15 மணிக்கு முன்பு வெளியேறவோ அனுமதி இல்லை. இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT