Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM

மா மரங்களில் தேன் நோய் தாக்குதல்; மா விளைச்சல் பாதிக்கும் அபாயம் : கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை

மா மரங்களில் தேன் நோய் தாக்குதலால் மா விளைச்சல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாம்பழ சீசன்மார்ச் தொடங்கி ஏப்ரல், மே, ஜூன்வரை நீடிக்கும். மாநிலத்தில் ஆண்டுதோறும் மாம்பழ சாகுபடிப் பரப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 1.50 லட்சம் ஹெக்டேரில் மாம்பழ சாகுபடி நடைபெறுகிறது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்திலும் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.

தோத்தாபுரி (பெங்களூரா, கிளிமூக்கு), பங்கனப்பள்ளி, மல்கோவா, அல்போன்ஸா, ருமானி, சப்போட்டா, காலப்பாடு, நீலம்உட்பட 50 வகையான மாம்பழங்கள் தமிழகத்தில் விளைவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள61 தோட்டக்கலைப் பண்ணைகளில், 42 வகையான மாம்பழக்கன்றுகள் வளர்த்து விற்கப்படுகின்றன.

களைகட்டும் விற்பனை

மொத்த மாம்பழ உற்பத்தியில் தோத்தாபுரி 70 சதவீதம் சாகுபடி செய்யப்படுகிறது. ஜூஸ் தயாரிப்பு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, உள்ளூர் விற்பனை என மாம்பழ விற்பனை தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மா மரங்களில் பரவலாக தேன் நோய் தாக்குதல் இருப்பதால், பூக்கள் உதிர்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததோட்டக்கலைத் துறை அதிகாரிகள், செண்பகத்தோப்பு, மம்சாபுரம், வத்திராயிருப்பு, கான்சாபுரம், தாணிப்பாறை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, தேன் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளர்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் மா மரங்களில்தான் தேன் நோய் தாக்குதல் தென்படுகிறது. பிற பகுதிகளில் இந்நோய் பாதிப்பு இல்லை. இருப்பினும், தேன் நோய்பரவாமல் தடுக்கவும், இப்பகுதிகளில் நோய்த் தாக்குதலை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நோய் தாக்குதலால் மாம்பழ விளைச்சல் அதிக அளவு பாதிக்க வாய்ப்பில்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x