Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவை

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை போத்தனூரை சேர்ந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன் (36). இந்து முன்னணி அமைப்பின் உக்கடம் நகர துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு போத்தனூர் சங்கம் வீதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் தாக்கப்பட்டு, காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போத்தனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தாக்குதலை கண்டித்தும், இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பிற இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, ஏராளமான போலீஸார் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் பாககுவிக்கப்பட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்சியர் அலுவலக முன்பக்க வாயில் கதவு பூட்டப்பட்டது.

இதுதொடர்பாக இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'தாக்குதலுக்கு உள்ளான ராமகிருஷ்ணன் தேர்தல் பிரச்சார நாட்களில் தீவிரமாக பணியாற்றியவர். அவர் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது. இதேபோல் தொடர்ந்து இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்’ என்றார்.

தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் மாநகர காவல் துறையினர் பேச்சு நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தலைமையிலான இந்து முன்னணியினர் முற்றுகையை கைவிட்டு, மாநகர காவல் ஆணையரகம் சென்று புகார் அளித்தனர்.

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், காயமடைந்த ராமகிருஷ்ணனை கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். இதுகுறித்து வானதி சீனிவாசன் கூறும்போது, 'இதோபோன்று சில நாட்களுக்கு முன்பும் பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டவர் மீது தாக்குதல் நடத்தப்படுவது சந்தேகங்களை எழுப்புகிறது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x