குற்றப்பத்திரிகை நகலை 47 பேருக்கு அளிக்க ரூ.1.25 கோடி செலவு; டிஜிட்டல் வடிவில் நகல் அளிக்க உத்தரவிட முடியாது: நிதி நிறுவன மோசடி வழக்கில் போலீஸாரின் மனு டான்பிட் நீதிமன்றத்தில் நிராகரிப்பு

குற்றப்பத்திரிகை நகலை 47 பேருக்கு அளிக்க ரூ.1.25 கோடி செலவு; டிஜிட்டல் வடிவில் நகல் அளிக்க உத்தரவிட முடியாது: நிதி நிறுவன மோசடி வழக்கில் போலீஸாரின் மனு டான்பிட் நீதிமன்றத்தில் நிராகரிப்பு
Updated on
1 min read

‘ஃபைன் ஃபியூச்சர்’ நிதி நிறுவன மோசடி வழக்கில் 47 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் அளிக்க ரூ.1.25 கோடி செலவாகும் என்பதால் சி.டி., அல்லது பென் டிரைவில் நகலை அளிக்க அனுமதிக்கக் கோரி போலீஸார் தாக்கல் செய்த மனுவை கோவை டான்பிட் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கோவை பீளமேட்டை தலைமையிடமாகக் கொண்டு ‘ஃபைன் ஃபியூச்சர்’ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.முதலீட்டுக்கு கூடுதல் வட்டிவழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் முதலீடு செய்தனர். இந்நிலையில், சில மாதங்களில் அந்த நிறுவனம் மூடப்பட்டது.

இதையடுத்து, முதலீடு செய்தபலர் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் 2010-ம் ஆண்டு புகார் அளித்தனர்.விசாரணையில், 25,389 முதலீட்டாளர்களிடம் ரூ.189.15 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நிறுவனத்தை நடத்திய செந்தில்குமார், எம்.விவேக், எம்.நித்யானந்தன், சத்தியலட்சுமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 43 பேர் வழக்கில் சேர்க்கப் பட்டனர். இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இறுதி குற்றப்பத்திரிகை நகலை குற்றம் சாட்டப்பட்ட 47 பேருக்கும் வழங்க அதிக செலவாகும் என்பதால் சி.டி. அல்லது பென் டிரைவில் நகலை அளிக்க அனுமதிக்கக் கோரி கோவை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “ஒருவருக்கு தலா 5 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகலை அளிக்க வேண்டியுள்ளது. ஒரு நகல் எடுக்க ரூ.2.50 லட்சம் செலவு செய்ய வேண்டும். இதற்கு மட்டுமே மொத்தம் சுமார் ரூ.1.25 கோடி செலவாகும். பொருளாதார குற்றப்பிரிவில் இதற்கு போதிய நிதி ஆதாரம் இல்லை. எனவே, குற்றப்பத்திரிகை நகலை சி.டி. அல்லது பென்டிரைவில் அளிக்க அனுமதித்து உத்தரவிட வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆவணங்களை பார்வையிட வேண்டுமெனில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பார்வையிடலாம்” என்று தெரிவிக்கப்பட்டது.

நிதியில்லை என்று கூறமுடியாது

இந்த மனுவை விசாரித்த டான்பிட் சிறப்பு நீதிபதி ஏ.எஸ்.ரவி, "போலீஸாரின் மனுவுக்கு எதிர்மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 207-ன் கீழ் இதுவரை டிஜிட்டல் வடிவில் நகலை அளிக்க எந்தவித வழிமுறைகளும் தெரிவிக்கப்படவில்லை. இதற்காக, அந்த சட்டப்பிரிவில் திருத்தம் தேவைப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிர்காலத்தில் வேண்டுமானால் இதுபோன்று டிஜிட்டல் வடிவில் நகல்களை வழங்கும் நடைமுறை உறுதியாக பின்பற்றப்படலாம். தவிர, அரசு தன்னிடம் நிதியில்லை என்று கூற முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நகல்களை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in