Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டு பயணம் செய்தவர் பெட்ரோலுக்கு பணம் தராததால் கொலை: கொளத்தூரில் இளைஞர் கைது

இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டு பயணித்தவர், பெட்ரோலுக்கு பணம் தராததால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை கொளத்தூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொளத்தூர் வளர்மதி நகரின் முதலாவது பிரதான சாலையில் 45 வயதுள்ள நபர் ஒருவர் கடந்த 4-ம் தேதி அதிகாலை இறந்துகிடந்தார். தகவல் கிடைத்து வந்த கொளத்தூர் போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (47) என்பதும். கொளத்தூரில் உள்ள உறவினரை பார்க்க வந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த 3-ம் தேதி நள்ளிரவு 2.30 மணி அளவில், இருசக்கர வாகனத்தில் சங்கரை அழைத்து வந்த ஒருவர், அவரை கையால் தாக்குவதும், சங்கர் கீழே சாய்ந்ததும் அந்த நபர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதும் அதில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து, அப்பகுதிகளில் இருந்த 45 சிசிடிவி கேமரா பதிவுகளை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர். இருசக்கர வாகனத்தின் அடையாளமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொளத்தூர் அன்னை சத்யா நகர் முதல் குறுக்குத் தெருவை சேர்ந்த சசிகுமார் (19) என்பவரை போலீஸார் நேற்று கைது ெய்தனர்.

நடந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சசிகுமார் கடந்த 3-ம் தேதி நள்ளிரவு மது அருந்திவிட்டு, இருசக்கர வாகனத்தில் ரெட்டேரி வழியாக சென்றுள்ளார். வழியில் நின்றிருந்த சங்கர் லிஃப்ட் கேட்க, அவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டுள்ளார். கொளத்தூர் வளர்மதி நகருக்கு அழைத்து வந்ததும், பெட்ரோல் செலவுக்கு சங்கரிடம் பணம் கேட்டுள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சசிகுமார் கையால் தாக்கியதில் அதே இடத்தில் சங்கர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது சட்டைப் பையில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பிய சசிகுமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x