Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

மின்தடை ஏற்படுவதை தடுக்க மின் கம்பங்களில் புதிய கருவி பொருத்த மின்வாரியம் திட்டம்

சென்னை

அதிக மின்இணைப்பு உள்ள மின்கம்பங்களில் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதைத் தடுக்க, அலுமினியம் பஸ்பர் என்ற புதிய கருவியை பொருத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 2 கோடி வீட்டு மின்இணைப்புகள், 35 லட்சம் வணிக நிறுவன மின் இணைப்புகள், 7 லட்சம் தொழிற்சாலை மின்இணைப்புகள், 24 லட்சம் விவசாய மின்இணைப்புகள், 11 லட்சம் குடிசை மின்இணைப்புகள் என மொத்தம் 2.90 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளன.

மின் உற்பத்தி ஆலைகளில் இருந்து துணைமின் நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு மின் கம்பங்கள் மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த மின்கம்பங்களில் ஒருசில இடங்களில் ஏராளமான மின்இணைப்புகள் உள்ளன. குறிப்பாக, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் ஒரு கம்பத்தில் இருந்து குறைந்தபட்சம் 10-க்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் உள்ளன.

இத்தகைய மின்கம்பங்களில் பழுது ஏற்பட்டால், ஊழியர்கள் ஒவ்வொரு இணைப்பாக ஆய்வு செய்த பிறகே சரி செய்ய வேண்டியுள்ளது.

இதனால், பல மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சினைக்குத்தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட மின்கம்பங்களில் அலுமினியம் பஸ்பர் என்ற கருவியை பொருத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம், மின்கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்ய முடிவதோடு, மின்தடை ஏற்படுவதும் குறையும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x