Published : 11 Apr 2021 07:42 PM
Last Updated : 11 Apr 2021 07:42 PM

முகக்கவசம் அணியாமல் செல்கிறீர்களா? -கரோனாவுடன் ரூ.200 அபராதமும் உண்டு: நடவடிக்கையில் போலீஸ் தீவிரம்

சென்னை

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றதவர்கள், அரசின் பாதுகாப்பு நடைமுறைகளை மீறுபவர்கள் மீது சென்னை போக்குவரத்து சட்டம் ஒழுங்கு போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. கரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டுமானால் அதிக அளவில் பரிசோதனைகள் செய்து பாதிப்புள்ளவர்களை தனிமைப்படுத்துவது, தடுப்பூசி போடுவதை அதிகரிப்பது, பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வைப்பது என முடிவெடுத்தது.

அதன்படி தளர்வுகளை நீக்கி மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், இனி திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. ஷாப்பிங் மால்கள், கடைகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி. ஆட்டோ, டாக்சிகளில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதி. உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி

உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. தமிழகத்தில் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப் 10 முதல் தடை. இறுதி ஊர்வலங்களில் 50 பேர் பங்கேற்கலாம். திருமணத்தில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி. உள் கூட்டங்களில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி. மதவழிப்பாடுகளுக்கு இரவு 8 மணி வரை மட்டும் அனுமதி.

அரசு, தனியார் பேருந்துகளில் நின்று பயணிக்கத் தடை. இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டன. கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்ட நிலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.500, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள், வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.5000 வரை அபராதம் என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் பொதுமக்கள் தொடர்ந்து அலட்சியமாக முகக்கவசம் இல்லாமல் பயணிப்பது, தனிமனித இடைவெளியை மீறுவது என நடந்ததால் சென்னை மாநகராட்சி அபராதம் விதிக்கும் முறையை கடுமையாக்கியுள்ளது. மண்டலவாரியாக 15 மண்டலங்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியினருடன் இணைந்து காவல்துறையும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சென்னை முழுவதும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸார் சாலையில் செல்வோர் வாகனத்தில் செல்வோரில் முகக்கவசம் இன்றி பயணிப்போரை கண்டறிந்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.

முகக்கவசம் அணியாதவர்கள், முகக்கவசத்தை ஒழுங்காக அணியாதவர்கள், போலீஸாரை கண்டதும் எடுத்து அணிபவர்கள் யாராக இருந்தாலும் ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்காக சென்னை மாநகராட்சி போலீஸாருக்கு அபராத ரசீதை வழங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x