Last Updated : 11 Apr, 2021 09:38 AM

 

Published : 11 Apr 2021 09:38 AM
Last Updated : 11 Apr 2021 09:38 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்: கரோனா அறிகுறியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சோகம்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கரோனாஅறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 63.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. இத்தொகுதிக்கு, வத்திராயிருப்பைச் சேர்ந்த அந்தக் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாதவராவ் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.

வேட்புமனு தாக்கல் செய்த கையோடு, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இரண்டு நாட்கள் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கரோனா அறிகுறியுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் ஓய்வெடுத்துக் கொள்ள, அவருடைய மகள் திவ்யா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மாதவராவ் உடல் நிலை பாதிப்பால் அவர் மகள் வேட்பாளராக மாற்றப்படுவார் என்றுகூட தகவல் வெளியானது. ஆனால் அவ்வாறு எந்த நடவடிக்கையையும் கட்சி மேலிடம் எடுக்கவில்லை.

சிகிச்சையில் இருந்தபோது, அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் நூரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை 07.55 மணி அளவில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்தார்.

தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இவருக்கு சொந்த வீடு இருந்தாலும் சென்னையில் வசித்து வந்ததால் உடலை எங்கு கொண்டு செல்வது என்பது பற்றி இன்னும் குடும்பத்தினர் முடிவு செய்யவில்லை.

மே 2ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகவுள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x