Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்கள் மீது செங்கையில் 39 ஆயிரம் வழக்குகள் பதிவு: ரூ.48 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டத்தில், முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் போலீஸார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்தவர்கள் மீது 39,725 வழக்கு பதிந்து ரூ.48,72,800 அபராதத்தை போலீஸார் வசூலித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்களில் கூடுவது, முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் உலா செல்வது உள்ளிட்ட விதி மீறல்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடினால், ரூ.200 அபராதம் விதிக்கப்படும் மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜான் லூயிஸ் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, செங்கல்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், போலீஸார் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியவர்களுக்கு, அபராதம் விதித்தனர்.

மேலும், முகக்கவசம் அணிவித்து, கரோனா தடுப்பு குறித்து, போலீஸார் அறிவுரை வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் கடந்த 24-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது 39,725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ 48 லட்சத்து 72 ஆயிரத்து800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 8.9-ம் தேதிகளில் மட்டும் 3,109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3,36,500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கூறியதாவது: கரோனா வைரஸ் 2-வது கட்டமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பரவும் வேகம் அதிகமாக உள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்த வைரஸை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். தமிழக அரசு திருமண மண்டபங்கள், பொதுக்கூட்டங்கள், திருவிழாக்கள் மற்றும் திரையரங்குகளில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எனவே மக்கள், அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்கள் கபசுர குடிநீர் குடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த பணி தொடர்ந்து நடைபெறும். ஆகவே பொதுமக்கள் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x