

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே விவசாயிகளே தோண்டிய ஆழ்துளை கிணறுக்கு சட்டப்பேரவைத் தொகுதி எல்லை பிரச்சினையால் 10 ஆண்டாக மின் இணைப்பு கொடுக்கவில்லை. இதனால் 100 ஏக்கர் விவசாய நிலம் தரிசாக விடப்பட்டுள்ளது.
காளையார்கோவில் ஒன்றியம் சேதாம்பல் ஊராட்சியில் உள்ளது இடைக்காட்டூர். இது ஆளே குடியில்லாத பேச்சில்லா கிராமம். இக்கிராமத்தில் ஆத்திவயல், புல்லுக்கோட்டை, இளையான்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த என்.புக்குளி, மாதவநகர், செந்தமிழ்நகர் ஆகிய கிராம விவசாயிகளுக்கு 100 ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு அங்குள்ள ஜமீன் கண்மாய் மூலம் நீர்பாசனம் செய்யப்படுகிறது.
இக்கண்மாய்க்கு வரத்துக் கால்வாய் தூர்வாராததால் தண்ணீர் வரவில்லை. இதையடுத்து விவசாயிகள் தங்களது சொந்த பணத்தில் மூன்றில் ஒரு பங்கு செலுத்தி, நமக்கு நாமே திட்டத்தில் 2010-11-ம் ஆண்டு கண்மாயில் ஆழ்துளைக் கிணறு தோண்டினர்.
பணி முடிந்ததும் மின் இணைப்பு கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 10 ஆண்டுகளாகியும் இணைப்பு கொடுக்கவில்லை. மேலும் இத்திட்டத்தில் தொகுதி அடிப்படையில் மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது. ஆழ்துளைக் கிணறு அமைந்துள்ள பகுதி சிவகங்கை, மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி எல்லையில் அமைந்துள்ளது. இந்த கண்மாய் அமைந்துள்ள பகுதி எந்தத் தொகுதியில் வருகிறது என்ற குழப்பத்தால் மின் இணைப்பு கொடுப்பதில் தாமதமாகிறது. இதனால் நுாறு ஏக்கர் விவ சாய நிலமும் பல ஆண்டுகளாக தரிசாக விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ மதியரசன் கூறுகையில், 'பணியாளர் இல்லை, மீட்டர் இல்லை எனக் காலம் கடத்தி வருகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நட வடிக்கை இல்லை. தொகுதி எல்லைப் பிரச்னை யும் உள்ளது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டனர். நிலங்களும் தரிசாக விடப்பட்டன,' என்றார்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு திட்டம் என்பதால் தாமதம் ஏற்படுகிறது,' என்றார்.