Published : 11 Apr 2021 03:17 AM
Last Updated : 11 Apr 2021 03:17 AM

கோடை காலம் தொடங்கியதால் மானாமதுரையில் களைகட்டிய மண்பாண்டத் தொழில்

விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மண் கூஜாக்கள்.

மானாமதுரை

கோடைகாலம் தொடங்கியதால் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மண்பாண்டத் தொழில் களை கட்டி உள்ளது.

மானாமதுரையில் தயாராகும் மண்பாண்டப் பொருட்களுக்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. மானாமதுரை குலாலர் தெரு, உடைகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மண்பாண்டப் பொருட்கள் தயாரிப்பது பிரதான தொழிலாக உள்ளது.

இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. மண்பானைகள், அக்னிச்சட்டிகள், அகல் விளக்குகள், கலைப்பொருட்கள், அடுப்புகள், விநாயகர் சிலைகள், சமையல் சட்டிகள், கூஜாக்கள், ஜாடிகள், இசைக் கருவியான கடம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

கோடையில் பிரிட்ஜை விட மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக கோடைக்காலத்தில் குடிநீரை குளிர்ச்சியாக மாற்றும் மண்பானை, ஜாடி, கூஜாக்களுக்கு அதிக மவுசு உள்ளது. கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் மண்பாண்டத் தொழில் தயாரிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டது.

ஆனால் இந்தாண்டு முழு ஊரடங்கு இல்லாததால் மண்பானை, கூஜாக்கள் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது. ரூ.50 முதல் ரூ.250 வரை விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து மானாமதுரை மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறியதாவது: குறைந்த வருமானம் என்றாலும் பரம்பரைத் தொழிலாக மண்பாண்டம் தயாரித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x