Published : 11 Apr 2021 03:17 AM
Last Updated : 11 Apr 2021 03:17 AM

பவானிசாகர் வனப்பகுதியில் சாலையில் சுற்றும் யானைகள்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் சாலையோரம் நிற்பதும், சாலையைக் கடந்து செல்வதும் வாகன ஓட்டிகளை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. எனவே வனப்பகுதியில் உள்ள யானைகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன. யானைகள் சாலையோரம் நின்றும், சாலையை கடப்பதும் வாடிக்கையாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள் பவானி ஆற்றில் தண்ணீர் அருந்திவிட்டு பவானிசாகர் அணை பூங்காவின் அருகே உள்ள பாலத்தை கடந்து சென்றன.

யானைகளைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். யானைகள் சாலையைக் கடந்து சென்ற பின்னர் வாகனத்தை இயக்கினர்.

இதுதொடர்பாக பவானிசாகர் வனத்துறையினர் கூறும்போது, தற்போது கோடைகாலம் என்பதால் வனவிலங்குகள் அவ்வப்போது தண்ணீர் தேடி சாலையோரம் நடமாடுகின்றன. எனவே, வாகன ஓட்டிகள் எச்சரிக்கையோடு பயணிக்க வேண்டும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x