Published : 11 Apr 2021 03:17 AM
Last Updated : 11 Apr 2021 03:17 AM

மன்னார்புரம் மேம்பாலப் பணிக்கான ராணுவ நிலத்தைக் கையகப்படுத்த ஓரிரு வாரங்களில் அனுமதி: திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் நம்பிக்கை

மன்னார்புரம் மேம்பால பணிக்கு தேவையான ராணுவ நிலத்தை கையகப்படுத்துவதற்கான அனுமதி ஓரிரு வாரங்களுக்குள் கிடைக்கும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனான சந்திப்புக்குப் பிறகு திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்சி ஜங்ஷன் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக மத்திய பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை, ரயில்வே ஜங்ஷன் சாலை, கிராப்பட்டி வழியாக மதுரை சாலை, மன்னார்புரம் வழியாக சென்னை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பிரம்மாண்ட பாலம் கட்டும் பணிகள் கடந்த 2014–ம் ஆண்டு தொடங்கியது.

முதல்கட்டமாக மத்திய பேருந்து நிலைய சாலை, திண்டுக்கல் சாலை, கிராப்பட்டி சாலை, ஜங்ஷன் சாலை ஆகியவை இணைக்கப்பட்டு, அதன்வழியாக போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. எனினும் மன்னார்புரம் ராணுவ நிலத்தை பெறுவதில் ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாக அந்த வழித்தடத்தில் மட்டும் இணைக்கப்படாமல், மேம்பாலப் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.

இங்கு கையகப்படுத்தும் ராணுவ நிலத்துக்கு இணையாக, 0.6 ஏக்கர் மாற்று நிலத்தை, அதற்கருகிலேயே உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல்படை வளாகத்திலிருந்து பெற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கும், ராணுவ நிர்வாகத்துக்கும் தமிழக அரசும், எம்.பி.க்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி தொகுதி எம்.பி சு.திருநாவுக்கரசர் நேற்று டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து மனு அளித்தார். இதுதொடர்பாக சு.திருநாவுக்கரசர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

மன்னார்புரத்திலுள்ள ராணுவ நிலத்தை கையகப்படுத்துவதில் நிலவும் தாமதத்தால், மேம்பாலப் பணிகள் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக பாதியிலேயே நிற்பது குறித்து எடுத்துக் கூறினேன். மேலும் கையகப்படுத்தும் நிலத்துக்கான மாற்று இடமாக, ராணுவ மைதானத்தை ஒட்டியுள்ள நிலத்தை அளிக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக கடிதம் எழுதியுள்ளது குறித்தும் நினைவுபடுத்தினேன்.

எனவே, இதற்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறி உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். எனவே, இன்னும் ஓரிரு வாரங்களில், நில மாற்றம் மற்றும் நிலம் கையகப்படுத்துவதற்கான அனுமதி கிடைத்துவிடும் என நம்புகிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x