Published : 10 Apr 2021 02:19 PM
Last Updated : 10 Apr 2021 02:19 PM

முதல் இலக்கு கூடுதல் பரிசோதனை: அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் பணி: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி

சென்னை

கரோனா தொற்று பரவலை சமாளிக்க களப்பணி அதிகமாக செய்து தொற்றுள்ளவர்களைக் கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதி கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

“மாவட்டங்களில் இந்தியாவின் சராசரி 5.7 ஏற்றத்தைவிட அதிகமாக உள்ளது. சேலத்திலும் கரோனா சதவீதம் 5.6 சதவீதம் என்கிற எண்ணிக்கையில் உள்ளது. நம்முடைய முதல் இலக்கு பரவல் சதவீதத்தை 5 க்கு கீழே கொண்டு வரவேண்டும். அதற்கு ஒரேவழி கூடுதல் டெஸ்ட் எடுத்து தொற்றுள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி அவர்கள் மூலமாக 10 பேருக்கு பரவாமல் தடுப்பதுதான் முதல் வழி.

அதைத்தான் அனைவரும் செய்துகொண்டிருக்கிறோம். அதைத்தான் சென்னை மாநகராட்சியினர் செய்து வருகிறார்கள். அதே போன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கூடுதல் கரோனா சிகிச்சை மையம், படுக்கைகளை, ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்தல் தேவையான செவிலியர்களை நேரடியாக பணியமர்த்த அவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளோம்.

களப்பணி அதிகமாக செய்து தொற்றுள்ளவர்களைக் கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

அதற்காகத்தான் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இதை அமல்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக அனுப்பியுள்ளோம். படுக்கைகள் பெரிய மருத்துவமனைகளில் 4992 படுக்கைகள் உள்ளன. இதில் சிகிச்சையில் 2260 பேர் உள்ள நிலையில் மீதம் 2862 உள்ளது. தனியார் மருத்துவமனையில் 3853 படுக்கைகள் அதில் 1527 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலை மீதம் 2811 உள்ளது.

இது இல்லாமல் கோவிட் சிகிச்சை மையம் என கொண்டு வந்துள்ளோம். ஒட்டுமொத்தமாக சென்னையில் 18852 படுக்கைகள் தயாராக உள்ளனர். இதில் 5859 படுக்கைகள் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீதம் தயாராக உள்ளது. எண்ணிக்கை அதிகமாக உள்ளதே மீதமுள்ளவர்கள் எங்கே என்றால் அவர்கள் வீட்டுத்தனிமையில் உள்ளனர்.

எங்களுக்கு சென்னையில் உள்ள சவால் என்னவென்றால் கிங் இன்ஸ்டிடியூட்டுக்கும், ஓமந்தூராருக்கும் நேரடியாகச் சென்று அனுமதி கேட்கிறார்கள். ராஜீவ் காந்தி மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகள் தயாராக உள்ளது. ஒரு இடத்தில் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்றால் அங்கு அனைத்துவிதமான வசதிகளும் அமைக்கப்பட வேண்டும்.

அதற்காகத்தான் சிகிச்சை மையங்களை தயார் செய்து உங்களை அழைக்கிறோம். இங்கு மையம் அமைக்கப்பட்டதை காண இதன்பின்னர் செய்தியாளர்களை அழைக்க முடியாது, காரணம் நோயாளிகள் வந்திருப்பார்கள்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x