Last Updated : 10 Apr, 2021 07:39 AM

 

Published : 10 Apr 2021 07:39 AM
Last Updated : 10 Apr 2021 07:39 AM

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம்: ஆவணங்கள் சமர்ப்பித்த 80 பேரிடம் ரூ.1.19 கோடி திரும்ப வழங்கப்பட்டது

தமிழக சட்டப்பேரவை தேர்தலை யொட்டி தேர்தல் நடத்தை அமலில் இருந்த போது திருப்பத்தூர் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 80 பேரிடம் ரூ.1.19 கோடி திருப்பி வழங்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 42 நிலை கண்காணிப்புக்குழுவினர், 75 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததால் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம், விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை தீவிர கண்காணிப்புப் பணிகளில் பறக்கும் படை அலுவலர்கள் ஈடுபட்டனர். இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில், சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 118 பேரிடம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 1 கோடியே 10 லட்சத்து 80 ஆயிரத்து 524 ரூபாய் ரொக்கம், 3 கோடியே 69 லட்சத்து 56 ஆயிரத்து 948 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் என மொத்தம் ரூ.4 கோடியே 80 லட்சத்து 37 ஆயிரத்து 472 கைப்பற்றப்பட்டு அரசு கருவூல அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் வாகன சோதனைகள் திரும்பப்பெறப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மூலம் கைப்பற்றப்பட்ட பணம், பொருட்களை உரிய ஆவணங்கள் கொடுத்து திரும்பப் பெறலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை இழந்தவர்கள் அதற்கான ஆவணங்களைத் திரட்டி மாவட்ட கருவூல அலுவலரிடம் சமர்ப்பித்து வந்தனர்.

அதன்படி, வாணியம்பாடி தொகுதியில் 13 பேர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் 20 லட்சத்து 53 ஆயிரத்து 266 ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளன. ஆம்பூர் தொகுதியில் 17 பேர் ஆவணங்களை கொடுத்துள்ளதால் 22 லட்சத்து 84 ஆயிரத்து 130 ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளன.

ஜோலார்பேட்டை தொகுதியில் 22 பேர் உரிய ஆவணங்களை கொடுத்துள்ளதால் 44 லட்சத்து 5 ஆயிரத்து 62 ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் தொகுதியில் 28 பேர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதால் 31 லட்சத்து 35 ஆயிரத்து 7 ரூபாய் என மொத்தம் 1 கோடியே 18 லட்சத்து 77 ஆயிரத்து 465 ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் திரும்ப வழங்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள 38 பேர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காததால் 3 கோடியே 61 லட்சத்து 60 ஆயிரத்து 7 ரூபாய் மாவட்ட கருவூல அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. பணம் மற்றும் பொருட்களை இழந்தவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து பொருட்கள் மற்றும் பணத்தை மீட்டுச்செல்லாம் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x