Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில்வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வகுப்பில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.
தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
இந்நிலையில் வன்னியர்களுக்கான இந்த உள் இடஒதுக்கீட்டு சட்டம் சட்டவிரோதமானது எனஅறிவிக்கக் கோரி மதுரை பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த அபிஷ்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், தமிழகத்தில் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படாத நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள வன்னியர்களுக்கு மட்டும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது என்பது பிற சமூகத்தவர்களின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்து உள்ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும், என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஓய்வு பெற்ற நீதிபதியும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.நாகமுத்து ஆஜராகி, ‘‘இந்த சட்டம் அரசியல்ஆதாயத்துக்காகவும், குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்கு வங்கிக்காகவும் தேர்தல் நேரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு பிரிவினருக்கு மட்டும் உள்ஒதுக்கீடு வழங்கினால் அது மற்ற சமூகத்தவர்களின் உரிமையை பாதிக்கும். எனவே இந்த சட்டத்துக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.
ஆனால் நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT