இருசக்கர வாகனத்தில் இயந்திரங்கள் கொண்டு சென்ற விவகாரம்; வேளச்சேரி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவா?- தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என சத்யபிரத சாஹூ தகவல்

இருசக்கர வாகனத்தில் இயந்திரங்கள் கொண்டு சென்ற விவகாரம்; வேளச்சேரி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவா?- தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என சத்யபிரத சாஹூ தகவல்
Updated on
1 min read

வாக்கு இயந்திரங்கள் இருசக்கரவாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டசம்பவத்தில், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தலாமா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிக்கும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்தது. இதில், 3 அலுவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அந்த சம்பவத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:

வேளச்சேரியில் நடந்த சம்பவத்தை பொறுத்தவரை, 2 பயன்படுத்தப்படாத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியவற்றை வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளனர். அதில், விவிபேட் இயந்திரம் முதலில் 50நிமிடங்கள் பயன்படுத்திவிட்டு, 15 வாக்குகள் பதிவான நிலையில் பழுதானதாகும். வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் வெளியில்எடுத்துச் செல்லக் கூடாது. வாகனத்தில் எடுத்துச் செல்வது வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முழுமையாக எதிரானதாகும். பழுதானஇயந்திரங்கள் வேறு மையத்துக்கும், வாக்குப்பதிவு செய்யப்பட்டஇயந்திரங்கள் வாக்கு எண்ணும்மையத்துக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்.

இருப்பினும் இவற்றை மண்டல குழுக்களைச் சேர்ந்தவர்கள்தான் எடுத்துச் செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது தவறு. எனவே, இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அதிகாரிஆகியோர் அளித்த அறிக்கைகள்அடிப்படையில் முழுமையான அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பார்வையாளர்களும் தனியாக அறிக்கை அளித்துள்ளனர். இதுதவிர, காங்கிரஸ்வேட்பாளர் அளித்த மனுவும்,ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக முடிவெடுக்கும்.

இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் 200-க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. விவிபேட் இயந்திரங்களில், 15 வாக்குகளைவிட கூடுதல் வாக்குகள் பதிவாகியிருக்கும் என்று சந்தேகம் இருந்தால், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம்.

வாக்காளர் பட்டியலில் இருந்துபலரது பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து ஆய்வு நடத்தப்படும். பெயர்கள் விடுபட்டதை சோதனை செய்யுங்கள் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட போதிலும், அவர்கள் கடைசி நேரத்தில்தான் பார்க்கின்றனர். பல பகுதிகளில் சூழலுக்கேற்ப வா்க்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. அதில், சிலரது பெயர் வேறுவாக்குச்சாவடிக்கும் சென்றிருக்கலாம். அவற்றை பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in