Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM

யுகாதி பண்டிகையையொட்டி குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப் பள்ளி வாரச்சந்தையில் யுகாதி பண்டிகையையொட்டி, ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையையொட்டி உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டில், வரும் 13-ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் செயல்படும் வாரச்சந்தையில் வழக்கத்தை விடஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. ஆடுகளை வாங்கவும்,விற்பனை செய்யவும், உள்ளூர் மற்று மின்றி வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

இதேபோல், வேலூர், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் குவிந்தனர். இதனால் ஆடு விலை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறும்போது, கடந்த ஆண்டு கரோனாவால் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சந்தை கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது சந்தையில், 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10 ஆயிரம் வரையும், 15 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.15 ஆயிரம் வரையும், கிடாய் ஆடுகள் அதிகபட்சமாக ரூ.16 ஆயிரம் வரையும் விற்பனையானது.

ஒரே நாளில் சந்தையில் சுமார் ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகி இருக்கும்.ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x