Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM

சென்னையில் மக்கள் நெரிசலின்றி பயணம் செய்ய இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்: மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை

பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பயணம் செய்ய வசதியாக சென்னையில் இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தற்போது கரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக அரசு, கூடுதலாக சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில், பொதுவாக 44 இருக்கை வசதியும், 25 பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், தற்பொழுது தமிழக அரசால் பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சிரமமின்றி பயணம் செய்ய வசதியாக இன்று முதல் (10-ம் தேதி) 300 முதல் 400 மாநகர பேருந்துகள் வரை கூடுதலாக இயக்கப்படுகின்றன.

நெரிசல் நேரங்களில்...

குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மணலி, கண்ணகி நகர், பெரம்பூர், அம்பத்தூர், ஆவடி, திருவொற்றியூர், செங்குன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலிருந்து காலை மற்றும் மாலை நெரிசல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x