Last Updated : 09 Apr, 2021 05:25 PM

 

Published : 09 Apr 2021 05:25 PM
Last Updated : 09 Apr 2021 05:25 PM

காளையார்கோவில் அருகே கார் கவிழ்ந்து 3 பேர் மரணம்;  8 பேர் காயம்: சாமி கும்பிடச் சென்றபோது நேர்ந்த சோகம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சாமி கும்பிடச் சென்றபோது கார் கவிழ்ந்ததில், 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.

மதுரை தத்தனேரியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி அல்லிராணி (45). இவர் தனது உறவினர்கள் 10 பேருடன் ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலுக்குச் சாமி கும்பிட இன்று (ஏப். 09) அதிகாலை காரில் சென்றார். காரை அல்லிராணியின் மகன் பசும்பொன் ஓட்டினார்.

காலை 6:15 மணிக்கு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அடுத்த உழவூரணி வளைவில் சென்றபோது காரைத் திருப்ப முடியாமல் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், சம்பவ இடத்திலேயே அல்லிராணி (45), அவரது உறவினர் சாயல்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் (65) ஆகிய இருவரும் இறந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். இதில், மதுரை முல்லை நகரைச் சேர்ந்த ராஜா (52), சிவகங்கை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தார். மற்றவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சாமி கும்பிடச் சென்றபோது விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x