தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர் பதவி: கிரிஜா வைத்திய நாதன் நியமனத்திற்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர் பதவி: கிரிஜா வைத்திய நாதன் நியமனத்திற்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை நியமித்த மத்திய அரசின் உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினர்கள் பணியிடத்திற்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் ஆக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகிய மூவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இதில் கிரிஜா வைத்தியநாதன் பல்வேறு பதவிகளை வகித்திருந்தாலும், சுற்றுச்சூழல் விவகாரங்களை கையாண்டது தொடர்பாக சட்டப்படி தேவைப்படும் தகுதியை பெற்றிருக்கவில்லை, உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், “தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5-ன் படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு, 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே அனுபவம் உள்ளது என்பதால் இவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. அதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்”. என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “கிரிஜா வைத்தியநாதன் சுற்றுச்சூழல் சார்ந்த துறைகளில் தேவைப்படும் அடிப்படை அனுபவம் பெற்றிருக்கவில்லை.

அரசின் தலைமை செயலாளராக இருந்து அவர் முடிவெடுத்த விஷயங்களை நிபுணத்துவ உறுப்பினராக இருந்து ஒப்புதல் அளிக்கும் வகையில் அவர் நியமனம் நடைபெற்றுள்ளது. வரும் 19 ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் நிபுணத்துவ உறுப்பினராக அவர் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது”. என வாதிடப்பட்டது.

மனுதாரர் முன்வைக்கும் சுற்றுசூழல் சார்ந்த அனுபவம் இல்லை என்ற குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, கிரிஜா வைத்தியநாதன் அப்பணிக்கு நியமிக்கப்பட சட்டப்படியான அடிப்படை தகுதியை பெற்றிருக்கவில்லை என தெரிவித்து அவரது நியமன உத்தரவிற்கு தடை விதித்தனர்.

மேலும் வழக்கு குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய பணியாளர் துறை, கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in