

பாதையை திறக்கக்கோரி குளித்தலை நகராட்சிஅலுவலகத்தில் குளித்தலை பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகர் உழவர் சந்தை பகுதியிலிருந்து குளித்தலை ரயில்வேகேட் செல்லும் பாதையை கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் அப்பாதை அமைந்துள்ள பகுதியில் தனியார் இடம் உள்ளதாகக் கூறி நீதிமன்றம் சென்றதில் அப்பாதை மூடப்பட்டது.
இந்நிலையில். இதுதொடர்பான வழக்கில் கடந்த பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பாதையை உயர்நீதிமன்ற மதுரை கிளை திறக்க உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் பாதையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராததை கண்டித்து உடனடியாக பாதையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி குளித்தலை பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன் குளித்தலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது இருநாட்களில் நடவடிக்கைஎடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால், இரு வாரங்களுக்கு மேலாகியும் பாதையை திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து குளித்தலை பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் அமைப்பினர்குளித்தலை நகராட்சிஅலுவலக நுழைவாயில் பகுதியில் இன்று (ஏப். 9ம்தேதி) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நகராட்சி ஆணையர் (பொ) ராதா மற்றும் குளித்தலை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வரும் திங்கள் கிழமை உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். நீதிமன்றம் உத்தரவிட்டும் திங்கள் கிழமை வரை அவகாசம் கேட்பதேன்.பாதையை திறக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.