Published : 09 Apr 2021 12:24 PM
Last Updated : 09 Apr 2021 12:24 PM

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம், கரோனா தடுப்பு விதிகளை மீறினால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை

சென்னையில் அதிகரித்துவரும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முகக்கவசம் அணிவதை கடுமையாக்கியுள்ளது சென்னை மாநகராட்சி. இதில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதமும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும், அரசின் வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்காமல் மீறினால் அபராதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் கரோனா தொற்றுப் பரவல் இரண்டாம் அலையாக வேகமாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது, பொதுவெளியில் சமூக இடைவெளியின்றிக் கூடுவது, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்காதது காரணமாக கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, தினமும் 4500-ஐ நோக்கி உயர்ந்து வருகிறது. தலைநகர் சென்னையில் தினமும் 1500 என்கிற எண்ணிக்கையை நோக்கி தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கரோனா தொற்று ஏற்பட்டபோது கோயம்பேடு வணிக வளாகத்தில் ஒரே நாளில் குவிந்த மக்களால் தொற்று எண்ணிக்கை பரவலாக அதிகரித்தது.

அதன் பின்னர் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையும், சுகாதாரத்துறைச் செயலர் எடுத்த பெருமுயற்சியாலும் சென்னையின் பெரிய தொற்றுப் பகுதியாக விளங்கிய பல பகுதிகளில் தொற்று எண்ணிக்கை குறைக்கப்பட்டது. க்ளஸ்டர் எனப்படும் கொத்து கொத்தாகப் பரவும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு நேரடியாக சிகிச்சையும், அந்தப் பகுதியைத் தனிமைப்படுத்தியதன் மூலமாகவும் தொற்று குறைக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி காய்ச்சல் முகாம்கள் அமைத்து ஜிங்க் மாத்திரைகள், கபசுரக் குடிநீர், கரோனா பரிசோதனை, முகக்கவசம் விநியோகம், வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தியதன் மூலம் காய்ச்சல் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஜனவரி மாதத்துக்குப் பின் இயல்பு நிலை திரும்பினாலும் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வலியுறுத்தப்பட்டது. தொற்று எண்ணிக்கையும் குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்துக்குப் பின் சென்னையில் 200க்கும் கீழே இருந்த தொற்று எண்ணிக்கை திடீரென மீண்டும் உயரத் தொடங்கியது. சுகாதாரத்துறைச் செயலர் இதுகுறித்து ஆய்வு நடத்தி எச்சரித்தார். சென்னையில் க்ளஸ்டர் எனப்படும் மொத்தத் தொற்று ஏற்படும் பகுதிகள் மீண்டும் உருவாவதாக எச்சரித்த அவர், முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார். அந்த நேரம் தொற்று எண்ணிக்கை 400 என்கிற அளவில் இருந்தது.

மீண்டும் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் காய்ச்சல் முகாம்களை நடத்தவும், வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நேற்று தமிழக அரசு கரோனா தடுப்பு விதிகளை அறிவித்தது. பாதுகாப்பு நடைமுறைகளும், தளர்வுகளை நீக்கி கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி கரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுவோருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் எனவும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும், சமூக இடவெளி, அரசின் கரோனா தடுப்பு விதிகளை மீறும் நிறுவனங்கள், கடைகள், ஜிம், ஸ்பா, சலூன்களுக்கு ரூ.5000 வரை அபராதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மண்டல வாரியாக இலக்கு நிர்ணயித்தும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கரோனா விதிமுறைகளை மீறும் நிறுவனங்களை மூடி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x