Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம்: மாநகராட்சி பொறியாளர் உட்பட 4 பேருக்கு காவல்துறை சம்மன்

வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநகராட்சி உதவி பொறியாளர் உட்பட 4 பேருக்கு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன. சென்னை வேளச்சேரி-தரமணி 100 அடி சாலையில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒருவர் இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்றார். இதைப் பார்த்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அவரை மடக்கிப் பிடித்தனர். கள்ள ஓட்டு போடுவதற்காக இயந்திரங்களை எடுத்துச் செல்வதாக கூறி, அவரை தாக்க முயன்றனர்.

தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீஸார், 3 வாக்குப்பதிவு இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

அவற்றை கொண்டு சென்ற நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர். சென்னை மாநகராட்சி பணியாளர் வேளாங்கண்ணி (48)என தெரியவந்தது. வாக்குப்பதிவுஇயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாட்டுக்காக 3 இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டதாகவும், தேவை ஏற்படாததால் அவற்றை மீண்டும் மாநகராட்சி அலுவலகத்துக்கே கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹுவிடம் புகார் மனு அளித்தார். ‘‘திட்டமிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றும் நோக்கத்தில் சதி நடந்துள்ளது. இதில் அதிமுகவுக்கு முக்கிய பங்கு உள்ளதாக சந்தேகிக்கிறோம். பிடிபட்ட ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து அவர்களிடம் பேசிய நபர்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்’’ என காங்கிரஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், பணியாளர்கள் வேளாங்கண்ணி, சரவணன், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வாசுதேவன் ஆகிய 4 பேருக்கு வேளச்சேரி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 12-ம் தேதி காலை 10 மணிக்கு வேளச்சேரி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மனில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x