Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
சிறை அதிகாரிகள் சித்ரவதை செய்வதாகக்கூறி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாண்டியன் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி ரவி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது சிறையில் அதிகாரிகள் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாகவும், மனநல வார்டில் அடைத்து வைப்பதாகவும் நீதிபதியிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த பிளேடால் திடீரென தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ந்த போலீஸார், உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி பிளேடைப் பிடுங்கியுள்ளனர். ரத்தம் பீறிட்ட நிலையில் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. நீதிபதி முன்பாக கைதி ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு ஈடுபட்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கழுத்தை அறுத்துக்கொண்ட பாண்டியனின் வழக்கறிஞர் பி.சங்கர் கூறும்போது, ‘‘பாண்டியன் சிறைக்குள் சிறை அதிகாரிகள் தரும் வேலையை செய்கிறார். இதற்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியத்தில் ஒருபகுதியை ஓர் அதிகாரி பறித்துக்கொள்வதாகவும், இதுதொடர்பாக புகார் அளித்ததால் தன்னை சிறை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து தாக்குவதாகவும், மனநல வார்டில் அடைத்து சித்ரவதை செய்வதாகவும் தன்னிடம் தெரிவித்தார். அதனால் தான் இன்று தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT