Last Updated : 08 Apr, 2021 05:30 PM

 

Published : 08 Apr 2021 05:30 PM
Last Updated : 08 Apr 2021 05:30 PM

ரூ.1,000 ஊதியம் தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டனர்: திருச்சியில் தேர்தல் நாளில் கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் புகார்

புகார் தெரிவித்த இளைஞர்கள்.

திருச்சி

ரூ.1,000 ஊதியம் தருவதாகக் கூறி வருவாய்த் துறையினர் ஏமாற்றிவிட்டனர் என்று, தேர்தல் நாளில் கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் புகார் கூறியுள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகள் உள்ளன.

இந்த 9 தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மொத்தம் 1,147 வாக்குப்பதிவு மையங்களில் 3,292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, வாக்களிக்க வரும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்குள் நுழைவதற்கு முன்னதாக கிருமிநாசினி அளித்து கைகளை சுத்தம் செய்ய வைத்து, வாக்காளர்களுக்கு பாலித்தீன் கையுறை, முகக்கவசம் இல்லாமல் வருவோருக்கு முகக்கவசம் அளிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒரு நாள் கூலி அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், ரூ.1,000 ஊதியம் தருவதாக பணியில் ஈடுபடுத்திவிட்டு, தற்போது ரூ.250 மட்டுமே தர முடியும் என்று ஏமாற்றுவதாக இந்தப் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் புகார் கூறினர்.

இது தொடர்பாக, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி வாக்குச்சாவடி ஒன்றில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் 20 பேர், இன்று (ஏப். 08) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின்னர், அவர்கள் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறுகையில், "தேர்தல் நாளில் வாக்குச்சாவடிகளில் கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட ஆட்கள் தேவைப்படுவதாகவும், தலா ரூ.1,000 வீதம் ஊதியம் தரப்படும் என்றும் பூத் ஸ்லிப் விநியோகித்தவர்கள் மூலம் தெரிய வந்தது.

தொடர்ந்து, தேர்தல் நாளன்று பொன்மலை பகுதி வாக்குச்சாவடி ஒன்றில் 28 பேர் பணியில் ஈடுபட்டோம். எங்களுக்கு யாரும் உணவு தராததால், அதற்கும் செலவழித்தோம். தேர்தல் முடிந்த பிறகு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஊதியம் அளித்த வருவாய்த் துறையினர், எங்களுக்குத் தரவில்லை.

இது குறித்து, கேட்டபோது ஒருவருக்கு தலா ரூ.250 வீதம் ஒரு வாரத்துக்குள் தரப்படும் என்றனர். ஒரு நாள் முழுவதும் பணியில் ஈடுபட்டு, உணவுக்கும் செலவழித்துள்ள நிலையில், ரூ.250 மட்டுமே தரப்படும் என்பது எங்களை ஏமாற்றும் செயல். கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஆட்களைப் பிடிக்க செய்யப்பட்ட உத்தி. எனவே, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்தோம்" என்றார்.

இதனிடையே, இன்று பிற்பகலில் இளைஞர்களைத் தொடர்பு கொண்டு பேசிய ஒருவர், திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து ரூ.250 வீதம் ஊதியத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால், கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறும்போது, "தேர்தல் நாளன்று உணவுக்கு செலவழித்துள்ள நிலையில், திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து ரூ.250-ஐ பெற்றுக் கொள்ளச் சொல்வது எந்த வகையிலும் நியாயமில்லை" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x