Published : 08 Apr 2021 05:02 PM
Last Updated : 08 Apr 2021 05:02 PM

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 வாரத்திற்குள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை

கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு தளர்வுகளை நீக்கி மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக 2 வார காலத்திற்குள் போடவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 20 நாட்களில் கரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கரோனாவின் வேகம் 4000 ஆக நெருங்கி வருகிறது. சென்னையில் 1500-ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக விலகல், பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க அரசு அறிவித்துள்ளது.

இன்று தமிழக அரசு கரோனா தளர்வுகளை நீக்கி மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் முகக்கவசம் உள்ளிட்டவற்றை கடுமையாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு வருமாறு:

“சென்னை மாநகராட்சி பகுதிகளில் நோய்த்தொற்றை குறைக்கும் பொருட்டு மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் கள அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். இதேப் போன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த பகுதியில் இருந்து வெளியில் வராத வகையில் காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களை கொண்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

இந்த பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவது, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார்வலர்களும் நியமிக்கப்படுவர். தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும் அதனை முழுமையாக தடுக்கவும் பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

கட்டாயம் முகக்கவசம்

பொதுமக்கள் வெளியே செல்லும் போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து முழு ஒத்துழைப்பு நல்கினால் தான் இந்த நோய்த்தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.

பல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனியே வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும். காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்திடவும் வீட்டுக்கு வீடு சென்று காய்ச்சல் சளி இருமல் உள்ளவர்களை தினந்தோறும் கண்காணிக்கவும், நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனை மேற்கொள்ளவும், காவல், சுகாதாரம், வருவாய் உள்ளாட்சி அமைப்புகளின் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இதனை தீவிரமாக கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பூசி அவசியம்

அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி முகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கரோனா பரவலை தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவ நிலையங்களில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவ மனைகளில் இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நோய்த்தொற்று இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இதனை கடைப்பிடித்து நோய்த்தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்று பொது மக்களை அரசு கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x