Published : 08 Apr 2021 04:15 PM
Last Updated : 08 Apr 2021 04:15 PM

மழை பெய்யாததால் வறண்டு வரும் முதுமலை; உணவு, தண்ணீர் தேடி இடம் பெயரும் விலங்குகள்

நீலகிரியில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் முதுமலையில் வறட்சி தொடங்கியுள்ளது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு காலம் தாமதமாக தொடங்கியது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டது. இந்தாண்டு கடும் உறைபனி பொழிவு ஏற்பட்ட நிலையில், பனி குறைந்தது. ஆனால், பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது.

தற்போது காலை நேர வெப்பநிலை 21 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை 11 டிகிரி செல்சியசாக உள்ளது. தற்போது கோடை மழை பெய்ய வேண்டிய நிலையில், இதுவரை கோடை மழை பெய்யவில்லை. இதனால் வறண்ட காலநிலை நிலவுகிறது.இதன் காரணமாக, தேயிலை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் புல்வெளிகள் உறைப்பனி தாக்கத்தால் கருகி விட்டன.

பனியிலிருந்து தங்கள் பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் பனி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தேயிலை செடிகளின் மேல் தென்ன ஓலைகள் மற்றும் வைக்கோல் போட்டு செடிகளை பாதுகாத்து வருகின்றனர்.

வறட்சியின் பிடியில் முதுமலை:

கடும் பனிப்பொழிவு காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் தாவரங்கள் காய்ந்து வருகின்றன. இதனால், பசுமை குறைந்து மெல்ல வறட்சி தலைத்தூக்கி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனத் தீ ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

தண்ணீர் தேடி சாலையை கடக்கும் புள்ளி மான்.

தாவரங்கள் காய்ந்து வருவதால், தீவனம் குறைந்து விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம் பெயரத்தொடங்கி விட்டன.

தண்ணீர் ஊற்றும் பணி தொடக்கம்:

முதுமலை புலிகள் காப்பகத்தில் வாழும் உயிரினங்கள் தங்களின் தண்ணீர் தேவைக்கு, மாயார் ஆற்றையும், இப்பகுதியில் உள்ள குளங்களில் நிறையும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றன.

தற்போது, வறட்சி தொடங்கியுள்ளதால், குளம், குட்டைகளிலும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால், வனவிலங்குகள் தண்ணீருக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் கூறும்போது, "வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய புலிகள் காப்பகத்தின் உட்பகுதியில், வனத்துறை மூலம் அமைக்கப்பட்ட,15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிமென்ட் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.

நாள்தோறும், 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் டிராக்டர் மூலம் எடுத்து வரப்பட்டு பல இடங்களிலும் நிரப்பப்படுகிறது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x