Published : 08 Apr 2021 01:48 PM
Last Updated : 08 Apr 2021 01:48 PM

கரோனா பரவல் அதிகரிப்பு; வந்தது மீண்டும் கட்டுப்பாடு: என்னென்ன ?- முழு விவரம்

சென்னை

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு தளர்வுகளை நீக்கி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று பிரதமருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்க புதிய வகை கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, தினமும் 4000-ஐ நோக்கி உயர்ந்து வருகிறது. தலைநகர் சென்னை தினமும் 1500 என்கிற எண்ணிக்கையை நோக்கி நகர்கிறது. தமிழ்நாட்டில் மார்ச் மாதத் தொடக்கத்தில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 450 என்ற அளவுக்குக் குறைந்திருந்தது.

ஆனால், கரோனா குறித்த அலட்சியம் காரணமாக தற்போது கரோனா பரவல் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. 30 நாட்களுக்கு முன் (மார்ச் 6) தினசரி கரோனா பரவல் 562 மட்டுமே. 30 நாட்களில் இந்த அளவு 648 சதவீதம் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இரண்டாவது அலையில் கரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது முக்கியக் காரணம் என சுகாதாரத்துறைச் செயலர் எச்சரித்தாலும் பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதையே இது காட்டுகிறது.

இந்நிலையில் கரோனா தடுப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயவும், கரோனா பரவல் குறித்து என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து ஆய்வு நடத்தவும் நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதன் முடிவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

* இனி திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

* ஷாப்பிங் மால்கள், கடைகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி.

* ஆட்டோ, டாக்சிகளில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதி.

* உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி

* உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

* தமிழகத்தில் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப் 10 முதல் தடை.

* இறுதி ஊர்வலங்களில் 50 பேர் பங்கேற்கலாம்.

* திருமணத்தில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.

* உள் கூட்டங்களில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.

* கோயில்களில் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபட அனுமதி.

* அரசு, தனியார் பேருந்துகளில் நின்று பயணிக்கத் தடை. இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதி.

* கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனைக்குத் தடை.

* மாவட்டச் சந்தைகளிலும் சில்லறை விற்பனைக்குத் தடை.

* படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்களுக்கு கட்டாய கரோனா பரிசோதனை.

* நீச்சல் குளங்கள், விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டுச் செயலபட அனுமதி.

* முகக்கவசம், நிலையான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி வாடிக்கையாளர்களை அனுமதிக்க வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு உத்தரவு.

* சுற்றுலாத் தளங்கள், கேளிக்கை விடுதிகளில் 50% மக்கள் மட்டுமே அனுமதி.

* வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்.

* தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வரும் ஏப்.10-ம் தேதியிலிருந்து ஏப்.30 வரை இந்தக் கட்டுபாடுகள் அமலில் இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x