

வாகனங்களுக்கான ஃபாஸ்டேக் பெறும் நடைமுறை சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சுங்கக்கட்டணங்கள் நியாயமானதாக இல்லை எனவும், தேசிய அளவிலான ஒரே கொள்கையை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கல்பட்டு அருகே பரனூர் மற்றும் திண்டிவனம் அருகே ஆத்தூர் சுங்கச் சாவடிகளின் ஒப்பந்தக்காலம் 2019 -ம் ஆண்டு முடிவடைந்து நிலையிலும், சுங்கக் கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர். மேலும், வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் எடுக்கும் நடைமுறை எளிதில் அணுகும் வகையில் இல்லை என்றும், சாதாரண மக்களும் அணுகும் வகையில் இருக்க வேண்டுமெனவும், நடைமுறையை மக்களுக்கு முறையாக விளக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
சுங்கக் கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள்கையை பின்பற்ற வேண்டும், சுங்கச்சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை முறையாக ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், நெடுஞ்சாலைகளில் வாகன நெருக்கம் இல்லாத வகையில் மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.