Last Updated : 08 Apr, 2021 12:59 PM

 

Published : 08 Apr 2021 12:59 PM
Last Updated : 08 Apr 2021 12:59 PM

சிதம்பரம் அருகே அரசுப் பேருந்து- லாரி மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு- 30 பேர் படுகாயம்

கடலூர்

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே இன்று அதிகாலை அரசு சொகுசு விரைவுப் பேருந்தும் மீன் பாடி லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் இருவர் என மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவு சொகுசுப் பேருந்து ஒன்று நேற்றிரவு 9.30 மணிக்கு சென்னை புறப்பட்டது. பேருந்தில் முன்பதிவு செய்த பயணிகள் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். நாகையைச் சேர்ந்த ஓட்டுநர் சிவக்குமார் (42) பேருந்தை ஓட்டினார்.

இந்நிலையில் பின்னிரவு 2.30 மணியளவில் அரசுப் பேருந்து சிதம்பரம் புவனகிரி வழியாகப் புதுச்சத்திரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. மேட்டுக்குப்பம் என்ற இடத்தில் அபாயகரமான மிகப்பெரிய வளைவு வழியாகப் பேருந்து வேகமாகச் சென்றபோது எதிரே கடலூரிலிருந்து சிதம்பரத்தை நோக்கி மீன் பாடி லாரி ஒன்று வேகமாக வந்தது. அரசுப் பேருந்து- லாரி இரண்டுமே நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் அரசுப் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் சிவக்குமார் (42), பயணிகள் தரங்கம்பாடியைச் சேர்ந்த அன்பரசன் (37), நாகையைச் சேர்ந்த வைரவன் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.

விபத்தின்போது பயங்கர சத்தம் கேட்டதால் விழித்தெழுந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்து கண்ணாடிகளை உடைத்து, பயணிகளை வெளியே மீட்டனர். இதற்குள் தகவல் அறிந்து சிதம்பரம் டி.எஸ்.பி லாமேக் தலைமையில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடனடியாக கிரேன் உதவியுடன் பேருந்து தூக்கி நிறுத்தப்பட்டு, அனைத்துப் பயணிகளும் மீட்கப்பட்டனர்.

நான்கு 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் நாகூரைச் சேர்ந்த முகமது ராஜா (46), அவர் மனைவி பரிசா பர்வின் (41), சென்னை துரைப்பாக்கம் விக்டர் (38), அவர் மனைவி தேவி (30), பெசன்ட் நகர் ரவி (52), ராமாபுரம் கருணாகரன் (38), நாகை சரவணன் (28), சௌந்தரராஜன் (45) உள்பட 19 பேர் படுகாயங்களுடன் கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதுபோல் 10 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

உயிரிழந்த மூவரின் உடல்களும் கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x