Published : 08 Apr 2021 11:14 AM
Last Updated : 08 Apr 2021 11:14 AM

சென்னையில் வேகமாகப் பரவும் கரோனா; காய்ச்சல் தடுப்பு முகாம்கள்; இன்று முதல் வீடு வீடாக சோதனை: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை

சென்னையில் கரோனா வேகமாகப் பரவிவரும் சூழ்நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளாக மீண்டும் காய்ச்சல் முகாம்களை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இன்று முதல் வீடு வீடாகப் பரிசோதனை நடத்த சென்னை மாநாகராட்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் கரோனா தொற்றுப் பரவல் இரண்டாம் அலையாக வேகமாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது, பொதுவெளியில் சமூக இடைவெளியின்றிக் கூடுவது, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்காதது காரணமாக கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, தினமும் 4000-ஐ நோக்கி உயர்ந்து வருகிறது. தலைநகர் சென்னையில் தினமும் 1400 என்கிற நிலையை அடைந்து 1500 என்கிற எண்ணிக்கையை நோக்கி தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கரோனா தொற்று ஏற்பட்டபோது கோயம்பேடு வணிக வளாகத்தில் ஒரே நாளில் குவிந்த மக்களால் தொற்று எண்ணிக்கை பரவலாக அதிகரித்தது.

அதன் பின்னர் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையும், சுகாதாரத்துறைச் செயலர் எடுத்த பெருமுயற்சியாலும் சென்னையின் பெரிய தொற்றுப் பகுதியாக விளங்கிய பல பகுதிகளில் தொற்று எண்ணிக்கை குறைக்கப்பட்டது. க்ளஸ்டர் எனப்படும் கொத்து கொத்தாகப் பரவும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு நேரடியாக சிகிச்சையும், அந்தப் பகுதியைத் தனிமைப்படுத்தியதன் மூலமாகவும் தொற்று குறைக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி காய்ச்சல் முகாம்கள் அமைத்து ஜிங்க் மாத்திரைகள், கபசுரக் குடிநீர், கரோனா பரிசோதனை, முகக்கவசம் விநியோகம், வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தியதன் மூலம் காய்ச்சல் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஜனவரி மாதத்துக்குப் பின் இயல்பு நிலை திரும்பினாலும் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வலியுறுத்தப்பட்டது. தொற்று எண்ணிக்கையும் குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச்சுக்குப் பின் சென்னையில் 200க்கும் கீழே இருந்த தொற்று எண்ணிக்கை திடீரென மீண்டும் உயரத் தொடங்கியது. சுகாதாரத்துறைச் செயலர் இதுகுறித்து ஆய்வு நடத்தி எச்சரித்தார். சென்னையில் க்ளஸ்டர் எனப்படும் மொத்தத் தொற்று ஏற்படும் பகுதிகள் மீண்டும் உருவாவதாக எச்சரித்த அவர், முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார். அந்த நேரம் தொற்று எண்ணிக்கை 400 என்கிற அளவில் இருந்தது.

ஆனாலும், தேர்தல் பிரச்சார நேரம், வழக்கமான அலட்சியம் காரணமாக யாரும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடாததால் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிரித்து நேற்றைய நிலவரப்படி 1400-ஐத் தாண்டியுள்ளது. தினசரி 1500 பாதிப்பு என்கிற பழைய நிலையை நோக்கி வேகமாக சென்னை செல்கிறது. இந்நிலையில் தேர்தல் நடவடிக்கைகள் முடிந்த காரணத்தால் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மீண்டும் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் காய்ச்சல் முகாம்களை நடத்தவும், வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல் அதற்கான பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தவும் தற்போது கரோனாவின் புதிய அறிகுறியாக டயரியா, வாந்தி போன்றவை உள்ளதால் அதற்கான அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறியவும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிய உடல் வெப்ப பரிசோதனை செய்வார்கள். டயரியா உள்ளவர்களைக் கண்டறிவார்கள். முகக்கவசம், தனிமனித இடைவெளி குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வார்கள். 45 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி போடாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி போட வலியுறுத்துவார்கள். அதுகுறித்த பயத்தைப் போக்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x