Published : 08 Apr 2021 10:31 AM
Last Updated : 08 Apr 2021 10:31 AM

தமிழகத்தில் வேகமாகப் பரவும் கரோனா; தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டும் பொதுமக்கள்: உயர் நீதிமன்றம் கவலை

சென்னை

தமிழகத்தில் கரோனா வேகமாகப் பரவிவரும் சூழ்நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிப்பதில் பொதுமக்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் கரோனா தொற்றுப் பரவல் இரண்டாம் அலையாக வேகமாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது, பொது வெளியில் சமூக இடைவெளியின்றிக் கூடுவது, கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கடைபிடிக்காதது காரணமாக கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, 4000-ஐ நோக்கி உயர்ந்து வருகிறது. தலைநகர் சென்னையில் தினமும் 1400 என்கிற நிலையை அடைந்து 1500 என்கிற எண்ணிக்கையை நோக்கி நகர்கிறது. தமிழ்நாட்டில் மார்ச் மாதத் தொடக்கத்தில் தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 450 என்ற அளவுக்குக் குறைந்திருந்தது.

ஆனால், கரோனா குறித்த அலட்சியம், தேர்தல் பிரச்சாரத்தில், பொது நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கூடியது காரணமாக தற்போது கரோனா பரவல் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. 30 நாட்களுக்கு முன் (மார்ச் 6) தினசரி கரோனா பரவல் வெறும் 562 மட்டுமே. 30 நாட்களில் இந்த அளவு 648 சதவீதம் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இரண்டாவது அலையில் கரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது முக்கியக் காரணம் என சுகாதாரத் துறைச் செயலர் எச்சரித்தார்.

முகக்கவசம் அணிவதில் பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதையே இது காட்டுகிறது. தற்போது அதிகரித்து வரும் நிலையில் தினந்தோறும் பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வழக்கு ஒன்றின் விசாரணைக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் காணொலி மூலமாக ஆஜராகி இருந்தார்.

அப்போது தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம், “தமிழகத்தில் தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை மிகத் தீவிரப் பிரச்சினையாகக் கருத வேண்டும். ஆனால், எந்த விதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் இல்லை. பொதுமக்களும் முகக்கவசம் அணிவதில்லை. தனி மனித இடைவெளியைப் பின்பற்றுவதில்லை”. என வேதனை தெரிவித்தார்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் தாக்கத்தைக் குறைக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரை மற்றும் நோய் தடுப்பிற்கு தேவையான மாற்றத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கரோனா விதிகளால் பொதுமக்கள் சோர்வடைந்துவிட்டதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். கரோனா பரவல் அதிகரித்து வரும்வேளையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் கவலை அரசு கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும், இன்று பிரதமர் நடத்தும் ஆலோசனைக்கூட்ட முடிவு, நேற்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மூலம் தளர்வுகள் மீண்டும் ரத்தாகும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x