

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஜூன் 16 வரை தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தங்களது சொத்துகளை விடுவிக்கக்கோரி லெக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 26-ம் தேதியன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஜூன் 6-ம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை ஜுன் 16-ம் தேதி வரை விசாரிக்க இடைக்கால தடை விதித்தும் அடுத்த விசாரணையை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது.