Published : 07 Apr 2021 05:35 PM
Last Updated : 07 Apr 2021 05:35 PM

4000-ஐ நெருங்கும் கரோனா பரவல்; கட்டுப்பாடு வருகிறதா?- தலைமைச் செயலர் ஆலோசனை

கோப்புப் படம்

சென்னை

கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மீண்டும் தளர்வுகள் நீக்கப்பட்டு கட்டுப்பாடுகள் வரலாம் எனத் தெரிகிறது.

கரோனா தொற்றுப் பரவல் இரண்டாம் அலையாக வேகமாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது, பொது வெளியில் சமூக இடைவெளியின்றிக் கூடுவது, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கடைபிடிக்காதது காரணமாக கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, தினமும் 4000-ஐ நோக்கி உயர்ந்து வருகிறது. தலைநகர் சென்னை தினமும் 1500 என்கிற எண்ணிக்கையை நோக்கி நகர்கிறது. தமிழ்நாட்டில் மார்ச் மாதத் தொடக்கத்தில் தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 450 என்ற அளவுக்குக் குறைந்திருந்தது.

ஆனால், கரோனா குறித்த அலட்சியம் காரணமாக தற்போது கரோனா பரவல் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. 30 நாட்களுக்கு முன் (மார்ச் 6) தினசரி கரோனா பரவல் 562 மட்டுமே. 30 நாட்களில் இந்த அளவு 648 சதவீதம் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இரண்டாவது அலையில் கரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது முக்கியக் காரணம் என சுகாதாரத் துறைச் செயலர் எச்சரித்தாலும் பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதையே இது காட்டுகிறது.

பொதுமக்கள் முகக்கவசம் அணியாவிட்டால், பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால் ரூ.5000 வரை அபராதம் விதிக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்நிலையில் தேர்தல், வாக்களிப்பு முடிந்துவிட்டதால் இனி கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதன் மூலம் கரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடிவெடுத்துள்ளது. நாளை கரோனா குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடைமுறை காரணமாக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

இதன் காரணமாக தமிழக அரசு எடுக்க உள்ள நிலைப்பாடு குறித்தும், கரோனா பரவல் குறித்து தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன எடுப்பது என்பது குறித்து ஆய்வு நடத்த இன்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தின் மூலம் சில கட்டுப்பாடுகளை விதிக்கும் அறிவிப்புகள் வரலாம் எனத் தெரிகிறது. முதற்கட்டமாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட தளர்வுகளை நீக்கலாம் எனத் தெரிகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குக் கட்டுப்பாடு கொண்டுவருவது, திரையரங்கு, ஜிம், நீச்சல் பயிற்சி நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், சுற்றுலாத் தளங்களில் கட்டுப்பாடுகளும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு அணியாவிட்டால் அபராதம் என்பது கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x