Published : 07 Apr 2021 05:43 PM
Last Updated : 07 Apr 2021 05:43 PM
ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சைக்கு தொலைபேசி மூலம் அனுமதி பெறும் முறை, வரும் 9 முதல் மீண்டும் கட்டாயமாகிறது. செல்போன் செயலியிலும் பதிவு செய்யலாம்.
புதுச்சேரி ஜிப்மரில் கடந்த ஆண்டு கரோனாவால் வெளிப்புற சிகிச்சைக்கு தொலைபேசி மூலம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இதனால், ஏழை மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். பின்னர் இம்முறை நீக்கப்பட்டது.
தற்போது கரோனா பரவலைச் சுட்டிக்காட்டி, ஜிப்மரில் மீண்டும் வெளிப்புற சிகிச்சைக்கு தொலைபேசி மூலம் அனுமதி பெறுவது வரும் 9-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, ஜிப்மர் தரப்பில் இன்று (ஏப். 07) வெளியிட்டுள்ள செய்தியில், "முன்பதிவு செய்ய துறைவாரியான தொலைபேசி எண்கள் www.jipmer.edu.in என்ற இணையத்தளத்தில் பெறலாம். 'ஹலோ ஜிப்மர்' என்ற ஆன்ட்ராய்டு செயலி உதவியுடன் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கும் முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவு செய்த நோயாளிகளுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணில் மருத்துவர், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார். அதில், சிகிச்சை தேவைப்படுபவர்கள் மட்டும் மருத்துவமனை வர குறுஞ்செய்தி அனுப்புவார்கள். நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறையிலும் நூறு நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவ ஆலோசனை பெற முடியும்.
முன் அனுமதிக்கான கைபேசி குறுஞ்செய்தியை உறுதி செய்த பின்னர்தான் மருத்துவமனைக்குள் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நோயாளியுடன் ஒருவர் மட்டுமே மருத்துவமனைக்கு வரலாம். அதே நேரத்தில், அவசர சேவைகள் எப்போதும்போல் முன்பதிவின்றித் தொடரும்" என்று தெரிவித்துள்ளனர்.
கடும் பாதிப்பாக இருக்கும் - ஏழை மக்கள் புகார்
பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகப் பகுதிகளில் இருந்தும் ஜிப்மருக்கு சிகிச்சைக்கு ஏழை மக்கள் அதிக அளவில் வருவர். செல்போனில் முன்பதிவு செய்யும்போது அதை எடுப்போர் வேறு மொழி பேசுபவராக இருப்பார்கள். பதிவு செய்தாலும் சரியான அணுகுமுறையில்லாமல் கஷ்டப்பட்டோம். அத்துடன் சில சமயம் சிகிச்சைக்கு வரும் முன் 'வீடியோ காலில்' அழைப்பார்கள்.
அனைவரிடத்திலும் நவீன செல்போன் இருப்பதில்லை என்பதைக் கூட ஜிப்மர் உணர்வதில்லை. அதேபோல், நீரிழிவு, புற்றுநோய் உள்பட பல நோய்களுக்கான மருந்துகளைப் பெறுவதிலும் இம்முறையால் சிரமம் ஏற்படும். அதைக் கடந்த முறை களையாததுபோல் இம்முறை ஜிப்மர் செயல்படக் கூடாது" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT