Last Updated : 07 Apr, 2021 12:31 PM

 

Published : 07 Apr 2021 12:31 PM
Last Updated : 07 Apr 2021 12:31 PM

சுதந்திர இந்தியாவின் அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது முதியவர் மாரப்ப கவுண்டர்

மாரப்ப கவுண்டர்

கோவை

1952 முதல் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரை அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தவறாது வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளார் 105 வயதான மாரப்ப கவுண்டர்.

கோவை, கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்த மாரப்ப கவுண்டர் 1916-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிறந்தவர். தற்போது அவரது வயது 105. இவரது பிறந்த தேதியை அவரது பெற்றோர்கள் ஓலையில், தேதி உள்ளிட்ட விவரங்களைத் தமிழில் எழுதி வைத்திருந்தனர். இதனால் அவரது வயது சரியாகத் தெரியவந்தது.

விவசாயியான இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர். காமராஜர் மற்றும் காந்தியடிகள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளையும் தான் பார்த்துள்ளதாக மாரப்ப கவுண்டர் பெருமிதம் கொள்கிறார். மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அனைவரையும் வலியுறுத்தினார்.

தள்ளாத வயதிலும் தனது வீட்டிலிருந்து சுமார் 2,000 அடிகள் தூரம் நடந்து சென்று, கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளோடு மாரப்ப கவுண்டர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். அவர் கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கருப்பராயன் பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

105 வயதானவர் வாக்களித்துவிட்டுச் செல்கிறார் எனத் தேர்தல் நடத்தும் அலுவலர் சொன்னதும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். 105 வயதில் ஓட்டுப் போட்டுவிட்டுத் திரும்பியவரை, கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பெருமையோடு பார்த்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x