Published : 07 Apr 2021 11:00 AM
Last Updated : 07 Apr 2021 11:00 AM

தருமபுரி அருகே ஒற்றை யானையைப் பிடிக்க மயக்க ஊசி செலுத்திய வனத்துறை: அடர் காட்டுக்குள் விடத் திட்டம்

கடந்த வாரம் எடுக்கப்பட்ட யானையின் படம்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நடமாடி வரும் ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வனத்துக்குள் கொண்டு செல்லும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பென்னாகரம் வனச் சரகத்துக்கு உட்பட்ட ஏரியூர் பகுதியில் பதனவாடி காப்புக்காடு உள்ளது. இதையொட்டிய கர்நாடகா மாநில வனப்பகுதியில் இருந்து 2 வாரங்களுக்கு முன்பு ஒற்றை ஆண் யானை ஒன்று இடம்பெயர்ந்து வந்தது. சுமார் 20 வயதுடைய இந்த யானை, பதனவாடி காப்புக்காட்டை ஒட்டி காவிரிக்கரையில் அமைந்துள்ள ஒட்டனூர், முத்தரையன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நடமாடி வந்தது. இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் நுழைந்து ராகி, மா, வாழை போன்ற பயிர்களைச் சேதம் செய்து வந்தது. 3 மாடுகளை தாக்கியத் இந்த யானை இருசக்கர வாகனம் ஒன்றைத் தூக்கி வீசிச் சேதப்படுத்தியது.

இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். மேலும், யானையை விரைந்து வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்குக் கோரிக்கை வைத்தனர். எனவே, யானையை வனத்துக்குள் அனுப்ப ஒரு வார காலமாக பென்னாகரம் வனச்சரக அதிகாரிகள் குழுவினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். வெடிகள் வெடிப்பது உள்ளிட்ட முயற்சிகளின் மூலம் காவிரியாற்றைக் கடக்கச் செய்து கருங்காலி மேடு வரை கடந்த வாரத்தில் வனத்துறையினர் இடம்பெயரச் செய்தனர். இருப்பினும், அந்த யானை மீண்டும் ஒட்டனூர் பகுதிக்கே திரும்பியது.

எனவே, யானையை அடர்வனப் பகுதிக்கு இடம்பெயரச் செய்வது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தலைமையில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, அது மயங்கிய பின்னர் வாகனத்தில் ஏற்றி அடர்ந்த காட்டுக்குள் கொண்டுசென்று இறக்கி விடுவது என முடிவெடுக்கப்பட்டது.

இந்தப் பணியை இன்று (ஏப்.7) மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று காலையிலேயே ஒட்டனூர் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் முகாம் அமைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள வனத்துறைக்கான கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். காலை 8 மணி அளவில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஊசி செலுத்தப்பட்டதில் இருந்து 2 முதல் 4 மணி நேரத்தில் யானை மயக்கமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் பதனவாடி காப்புக்காடு இருளச்சி கிணறு பகுதியில் வேடிக்கை பார்க்கத் திரண்ட கிராம மக்கள்.

யானை மயக்க நிலைக்குச் சென்றவுடன் கிரேன் மற்றும் பொக்லைன் வாகனங்கள் உதவியுடன் பிரத்யேகக் கூண்டு வண்டியில் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. வாகனத்தில் ஏற்றிய பின்னர், குடியிருப்புகளை ஒட்டிய பகுதிக்கு மீண்டும் வராத வகையில் அடர் வனப்பகுதி வரை கொண்டு சென்று பின்னர் யானையை விடுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிராம மக்களை அச்சுறுத்திய ஒற்றை யானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் தகவல் பரவியதால் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேடிக்கை பார்ப்பதற்காக அப்பகுதியில் ஏராளமாகத் திரண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x