

காரைக்கால் மாவட்டத்தில் சுமுகமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மாவட்டத் தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அர்ஜூன் சர்மா கூறியுள்ளார்.
காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, அவரது மனைவியும், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளருமான நிஹாரிகா பட் ஆகியோர் இன்று (ஏப். 06) மதியம் வாக்களித்தனர்.
பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப் பதிவு சுமுகமான முறையில் சென்று கொண்டிருக்கிறது. ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமைதியான முறையில் வெற்றிகரமாக, வாக்குப்பதிவு நடந்து முடியும் என நம்புகிறேன். தேர்தல் விதிமீறல்கள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வந்துள்ள புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளரும், அத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவுமான முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் வாக்களித்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் மதியம் 2 மணி நிலவரப்படி, 53.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.