Published : 06 Apr 2021 10:19 AM
Last Updated : 06 Apr 2021 10:19 AM

கோவில்பட்டியில் மந்தமான வாக்குப்பதிவு: காலை 9 மணி நிலவரப்படி வெறும் 8.43% பதிவு

கோவில்பட்டியில் மிக மந்தமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி வெறும் வெறும் 8.43% மட்டுமே வாக்கு பதிவாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

கோவில்பட்டி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ 8.10 மணிக்கு கடம்பூர் கே.சிதம்பராபுரத்திலுள்ள இந்து தொடக்கப்பள்ளி மையத்தில் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர்ந்து 3-வது முறையாக அமையும். கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் எனது வெற்றி அதிமுக ஆட்சிக்கு முதல் அடித்தளமாக அமையும். இந்த தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் 70 சதவீதம் எனக்கு பதிவாகும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். அந்த வகையில் எனது வெற்றி சிறப்பான வெற்றியாக இருக்கும்.

தொகுதிக்கு நான் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். அனைத்து சமுதாய மக்களும் ஒரு தாய் மக்களாக வாழும் நிலையை நான் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கி உள்ளேன்.

அதேபோல் வியாபாரிகள் 10 ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்தோம் என்ற மனநிறைவு எங்களுக்குப் போதும் என தாங்களாக முன்வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கான தீர்வு மே 2-ம் தேதி கண்கூடாக தெரியும் நிலையை நான் வாக்காளர்களிடம் பார்க்கிறேன்.

கோவில்பட்டியில் தொழிற்பூங்கா அமைப்பதற்கு தேவையான கோப்புகள் தயாராகிவிட்டன. ரூ.28 கோடியில் அரசு செவிலியர் கல்லூரி அமைய அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் உள்ளது.

நான் வெற்றி பெற்றதும் இந்த பணிகளை துரிதப்படுத்ததுவேன். அதேபோல் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமாக சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் மலைப்பகுதியில் 135 அடி உயர முருகன் சிலை அமைக்க பூமி பூஜை நடத்தப்பட்டு உள்ளது. மேலும் செல்லியம்மன் கோயில் கொடி மரத்துக்கு தங்க முலாம் அமைக்கும் பணி, கயத்தாறு முத்து கிருஷ்ணன் ஈஸ்வரர் திருப்பணி வேலைகள் ஆகியவற்றை விரைந்து முடிப்பேன். கோவில்பட்டியை தலைநகராகக் கொண்டு மாவட்டம் உருவாக்குவேன்.

நான் கூறியதை தான் மற்ற வேட்பாளர்களும் சொல்கின்றனர். புவிசார் குறியீடு பெற்றுள்ள கடலைமிட்டாய் சத்துணவு திட்டத்தில் இணைக்க அமையப்போகும் அதிமுக அரசு மூலம் முயற்சி எடுப்பேன். தமிழகத்தில் 140 இடங்களுக்கு மேல் அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். மக்களின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். நிச்சயமாக இந்த ஆட்சி தொடரும், என்றார் அவர்.

வாக்குப்பதிவு மிகமிகக் குறைவு:

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, திருச்செந்தூர் என ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கோவில்பட்டியில் 8.43%, ஒட்டப்பிடாரத்தில் 4.41, விளாத்திக்குளத்தில் 3.38% வாக்குப்பதிவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x