Published : 06 Apr 2021 07:17 AM
Last Updated : 06 Apr 2021 07:17 AM

தேர்தல் திருவிழா: முதல் ஆளாக ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் அஜித்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் நடிகர் அஜித்குமார் முதல் ஆளாக தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. 234 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கரோனா தடுப்பு நெறிமுறைகள் வாக்குச்சாவடிகளில் பின்பற்றப்பட்டுவருகிறது.

சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமாரும் அவரது மனைவி ஷாலினியும் வாக்களித்தனர். முதல் ஆளாக வாக்களிக்கும்படி காலையிலேயே இருவரும் வாக்குச்சாவடிக்கு வந்தனர். அஜித் வருகையையொட்டி அவரைக் காண அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். சிலர் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தனர். போலீஸார் ரசிகர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த சிரமப்பட்டனர்.

பின்னர், அஜித்தும் ஷாலினியும் பாதுகாப்பாக வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து ரசிகர் கூட்டம் அதிகரித்ததால் அஜித்தும் அவரது மனைவியும் வாக்குப்பதிவு தொடங்கும் 7 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அஜித் வாக்களித்துவிட்டு வெளியே வந்து, அடையாள மை பூசப்பட்ட தனது விரலை உயர்த்திக் காட்டினார். பின்னர் அவர் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டனர்.

திருவான்மியூர் வாக்குச்சாவடியில் அஜித் வந்து சென்ற சில நிமிடங்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர் சென்ற பின்னர் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x