Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM

தேர்தலில் வாக்களிக்க சென்னையில் இருந்து 5.5 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னை

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதற்கான முழு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்குப்பதிவு நாளன்று அனைத்து தரப்பினருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கநிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கி வேலை செய்வோர், தங்கள் சொந்தஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 1-ம் தேதி முதல்நேற்று வரை தேவைக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதன்படி, சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன் 3,090 சிறப்புப் பேருந்துகள் உட்பட மொத்தம்14,215 பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று மதியம் முதல் பொதுமக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருச்சி, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நேற்று அதிக அளவில் பயணம் செய்தனர். நெரிசலை தவிர்க்கும் வகையில் கடந்த 2 நாட்களாக கோயம்பேடு, தாம்பரம், கே.கே.நகர், பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன. இதனால், இந்த பேருந்து நிலையங்களிலும், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 1-ம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறோம். இருப்பினும், நேற்று மதியம் முதல் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. குறுகிய தூரம் செல்லும் பயணிகளுக்கு வசதியாக முன்பதிவு இல்லாத பேருந்துகளை அதிகம் இயக்கினோம். தேர்தலையொட்டி இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் மட்டும்5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

மேலும், தேர்தல் முடிந்த பிறகு மக்கள் சென்னை போன்ற நகரங்களுக்கு திரும்பும் வகையில் நாளை (7-ம் தேதி) முதல் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம். நெரிசலை தவிர்க்க, நீண்ட தூரம் செல்லும் மக்கள் www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x