Last Updated : 05 Apr, 2021 08:29 PM

 

Published : 05 Apr 2021 08:29 PM
Last Updated : 05 Apr 2021 08:29 PM

அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.10 லட்சம் மோசடி: அதிமுக நகரச் செயலாளர்கள் மீது எஸ்.பி அலுவலகத்தில் புகார்

திருப்பத்தூர் 

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.10 லட்சம் மோசடி செய்த அதிமுக நகரச் செயலாளர்கள் மீது அரசு அனைத்துத் துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில கவுரவத்தலைவர் ராஜவேலு என்பவர் திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

‘‘ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர் மணி என்பவர் தனது மகன் தினேஷ் என்பவருக்கு அரசு வேலை வாங்கி தர முயற்சி எடுத்து வந்தார். அப்போது, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியைச் சேர்ந்த பழனி என்பவர் மூலம் உதயேந்திரம் பேரூராட்சி அதிமுக நகரச்செயலாளர் சரவணன் மற்றும் வாணியம்பாடி நகரச்செயலாளர் சதாசிவம் ஆகிய 2 பேரும் மணிக்கு அறிமுகம் ஆகினர்.

அப்போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீலிடம் சிபாரிசு செய்து மணி மகன் தினேஷூக்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறையில் காலியாக உள்ள எழுத்தர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக ரூ.8 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறினர்.

அவர்கள் கூறியபடி கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் அதிமுக நகரச்செயலாளர் சரவணனிடம் ரூ.2 லட்சமும், அக்டோபர் 12-ம் தேதி அதிமுக நகரச்செயலாளர் சதாசிவம் மற்றும் சரவணன் ஆகியோரிடம் ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.8 லட்சம் கொடுக்கப்பட்டது.

பணத்தை பெற்ற அதிமுக நிர்வாகிகள் இதுவரை அரசு வேலை வாங்கி தரவில்லை. எனவே, கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதில் ரூ.5.90 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு பாக்கியுள்ள ரூ.2.10 லட்சத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வந்தனர்.

இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கேட்டபோது, பாக்கி பணத்தை தர முடியாது என்றும், வேண்டுமென்றால் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் எனக்கூறி மிரட்டல் விடுகின்றனர்.

எனவே, அமைச்சர் நிலோபர்கபீலின் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதுடன், பாக்கியுள்ள ரூ.2.10 லட்சம் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும்’’. இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x