Published : 05 Apr 2021 07:31 PM
Last Updated : 05 Apr 2021 07:31 PM

வாக்குப்பதிவு நிலவரம், வாக்குச்சாவடியில் கூட்டம் உள்ளதா?- தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தும் 3 செயலிகள்

சென்னை

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு செல்லும் வாக்காளர் தங்கள் வாக்குச் சாவடியில் கூட்டம் இருக்கிறதா? என்பது உள்ளிட்ட விஷயங்களை அறிந்து கொள்வது உள்ளிட்ட வசதிகளுக்காக 3 செயலிகளை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது, பூத் ஸ்லிப் இல்லாவிட்டால் வாக்களிக்க முடியாது என்பது தவறான எண்ணம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கூறியதாவது:

“முன்னர் 67000 வாக்குப்பதிவு மையங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 90,000க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் வந்துள்ளதால் வாக்குப்பதிவு மையங்கள் இடம் மாற்றம் இருக்கும். ஆகவே வாக்காளர்கள் அவர்கள் வாக்களிக்கும் மையம் பற்றி தெரிந்துக்கொள்ள 1950 என்கிற எண்ணை மாவட்ட எண்ணுடன் சேர்த்து (உதாரணமாக சென்னை என்றால் 0441950) கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

அல்லது தேர்தல் ஆணைய இணையதளத்திலும் போய் தெரிந்துக்கொள்ளலாம். வாக்காளர்கள் வாக்காளர் சீட்டு (பூத் ஸ்லிப்) இருந்தால் தான் வாக்களிக்கலாம் என்பது தவறான தகவல். ஏதாவது ஒரு அடையாள அட்டை இருந்தாலே வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கலாம். ஆனால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கவேண்டும். இன்று மாலைக்குள் பூத் சிலிப் 100% கொடுத்துவிடுவோம்.

இந்த தேர்தலில் சில முக்கியமான செயலிகளை (APP) கொண்டு வந்துள்ளோம்.

portal for people with disability

அதில் முக்கியமானது மாற்றுத்திறனாளிகளுக்கான செயலி (portal for people with disablity) அதில் வீல்சேர் உள்ளதா என கேட்டறியலாம், நேற்று அறிவித்தது போல் இலவச டாக்சி சேவையையும் இதன் மூலம் பெறலாம். இது தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இருக்கும்.

Que Status monitor

கியூ ஸ்டேட்டஸ் மானிட்டர் (Que Status monitor) என்ற போர்ட்டல் உள்ளது. அதை தேர்தல் ஆணைய வெப்சைட்டில் போய் உங்கள் வாக்குச் சாவடியில் கூட்டம் எவ்வளவு தற்போது நிற்கிறார்கள் என்பதை தெரிந்து அதற்கேற்றார்போல் வாக்களிக்கலாம்.

voter turn out app

இன்னொரு ஆப் (voter turn out app) வாக்காளித்தோர் விவரம் குறித்த செயலி. இதில் எவ்வளவு பேர் வாக்களித்துள்ளார்கள் என்கிற விவரத்தை அறிந்துக்கொள்ளலாம். இது கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது. இதில் அவ்வப்போது தகவல்கள் வரும், ஆனாலும் வாக்குப்பதிவு அதிகாரிகள் அளிக்கும் தகவல் தான் முக்கியம். அதையும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை அளிப்போம். ஆனாலும் இந்த செயலியில் கூடுதலான தகவல் இருக்கும்.

அதேபோல் சி விஜில் மூலமாக 3991 புகார்கள் வந்தது. அதன் மூலமாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதில் ஏராளமான பணம் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதிகமான புகார்கள் கரூர், கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், சென்னையில் அதிகம் புகார்கள் வந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x