

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டார் வாக்குப்பதிவு மையம் வந்து செல்ல இலவச வாகன சேவை ஏற்பாடு செய்துள்ளோம் என்று, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்து வரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி பூர்வா கார்க் இன்று (ஏப். 05) வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "புதுச்சேரியில் வாக்குப்பதிவையொட்டி கரோனா காலச்சூழலில் தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வாக்குப்பதிவு மையம் வந்து வாக்களிக்க வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டிலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு வந்து செல்ல இலவச போக்குவரத்து சேவை தேவைப்படுவோர், 1950 என்ற எண்ணில் பதிவு செய்ய கோரியிருந்தோம்.
அதன் அடிப்படையில், தேவைப்படுவோர் விவரங்கள் பூத் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டோர் வீட்டிலிருந்து வாக்குப்பதிவு மையம் வந்து செல்ல வாகன வசதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள், வயதோனோருக்கு தேவையான வசதிகளும் வாக்குப்பதிவு மையத்தில் இருக்கும்" என்று தெரிவித்தார்.