

பேரறிவாளன் விவகாரத்தில் பல்நோக்கு விசாரணைக்குழு விசாரணை முடியும் வரை தான் முடிவெடுக்க முடியாது என தமிழக ஆளுநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த கடிதத்தின் நகலை வழங்குமாறு அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் (எம்டிஎம்ஏ) பல்நோக்கு விசாரணைக்குழு விசாரணை முடியும் வரை எந்த முடிவையும் தான் எடுக்க முடியாது என தமிழக ஆளுநர் கடிதத்தில் தெரிவித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் மனுதாரரிடம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார், அவரது மனுவில், “சென்னை உயர்நீதிமன்றத்தில் (எம்டிஎம்ஏ) பல்நோக்கு விசாரணைக்குழு விசாரணை முடியும் வரை பேரறிவாளன் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது என ஆளுநர் கூறியுள்ளார்.
அதேவேளையில் உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தன் தண்டனையை நிறுத்தி வைக்க்கோரிய வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளனை விடுதலை செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும் குடியரசுத் தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன நீதிமன்றங்களில் இவ்வாறு இருவேறு மாறுபட்ட கருத்தை தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்நோக்கு விசாரணைக்குழு விசாரணை முடியும் வரை பேரறிவாளன் விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க முடியாது என்ற ஆளுநர் கடிதத்தின் நகலை தங்களுக்கு தர வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
அதேவேளையில், பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பிரதான மனுவுடன் இணைத்து ஆளுநர் கடித நகல் கோரிய அற்புதம்மாளின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.