Published : 05 Apr 2021 12:40 PM
Last Updated : 05 Apr 2021 12:40 PM

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?- 11 வகை ஆவணங்களை பயன்படுத்தலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை எனில், 11 வகையான அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாளை சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது நாளைக்காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடக்கிறது. வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி எது என்பதை தெரிந்துக்கொண்டு வாக்களிக்க செல்லவேண்டும். தங்களுடன் தேர்தல் ஆணையம் அளித்துள்ள வாக்குச் சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

இரண்டும் இல்லாதவர்கள் வாக்களிக்கும் பாகம், வாக்குச்சாவடி எண், வாக்காளர் எண் உள்ளிட்டவை குறித்து அறியாதவர்கள் உங்களின் வாக்குச்சாவடி குறித்த தகவலை அறிய elections.tn.gov.in என்ற வலைத்தளத்திற்குள் சென்று தெரிந்து கொள்ளலாம். இந்த வலைதளத்தில் உங்கள் வாக்குச்சாவடி எங்குள்ளது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

வாக்காளர் அட்டை இல்லாத பட்சத்தில் 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அவைகள் குறித்த விவரம் வருமாறு:

1.ஆதார் ஆட்டை

2.பான் கார்ட்

3.ஓட்டுநர் உரிமம்

4.பாஸ்போர்ட்

5.புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம்

6.வங்கி மற்றும் தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம்

7.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை

8.அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள்

9.தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்ட்

10.மக்கள் தொகை பதிவேடால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்ட் (Smart card issued by RGI under NPR)

11.எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டைகள்

இவை தவிர வாக்களிக்க செல்லும் முன் கட்டாயம் முகக்கவசம் அணிந்துச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாக்களிக்கும்போது தேவையற்ற அலைச்சலை தவிர்க்க வாக்காளர் எண், உரிய அடையாள அட்டையுடன் செல்வதே சிறந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x